வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (15:07 IST)

இனி கோடைகாலம் 8 மாதங்கள் நீடிக்கும்! அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் தொடர்ந்து வந்தால் கோடைகாலம் 8 மாதங்கள் வரை நீடிக்கும் என்ற அதிர்ச்சிகரமான ஆய்வு தகவல் வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் உலகம் முழுவதும் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுக்களால் பூமி வெப்பமடைந்து வருகிறது. மரங்களை வெட்டுதல், காட்டுத்தீ, குப்பைகளை எரித்தல் போன்ற தொடர் சங்கிலி நிகழ்வுகளால் பூமியின் பல்வேறு பகுதிகள் பருவநிலை மாற்றத்தை எதிர் கொண்டு வருகின்றன.

உலகம் வெப்பமடைவது மட்டுமல்லாமல் ஈரப்பதமும் அதிகரித்து வருகிறது. வெப்பம் மற்றும் ஈரப்பதம் கலந்த நிலை ”ஈரக்குமிழ் வெப்பநிலை” எனப்படுகிறது.

இந்த ஈரக்குமிழ் வெப்பநிலை இந்தியாவை பொறுத்தவரை 31 டிகிரி செல்சியஸாக உள்ளது. ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இந்த வெப்பநிலையை பொறுத்தே கோடைக்காலங்கள் அமைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் இந்த வெப்பநிலையை கணக்கிடுகையில் 2070க்குள் இந்தியாவில் கோடைகாலம் என்பது 8 மாதங்களாக மாற்றம் பெற வாய்ப்பிருப்பதாக ஆய்வியல் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. பொதுவாக இந்தியாவில் மார்ச் மத்திய பகுதியில் தொடங்கும் கோடைகாலம் ஜூன், ஜூலை வரை நீடிக்கிறது. அந்த குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆட தொடங்கிவிடுகிறது.

இந்த நிலையில் 8 மாதங்கள் கோடைகாலமாக இருந்தல் தண்ணீர் பிரச்சினை முதற்கொண்டு பஞ்சம் வரை பல பிரச்சினைகளை இந்தியா சந்திக்கவேண்டி வரலாம் என கூறப்படுகிறது.