பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!
பணி நேரத்திற்கு பிறகு அல்லது விடுமுறை நாட்களில், தனியார் நிறுவனங்கள் வேலை தொடர்பான மின்னஞ்சல்கள் மற்றும் போன் கால் அழைத்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில், இது குறித்த தனிநபர் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்ரியா சுலே இந்த மசோதாவை தாக்கல் செய்த நிலையில், இந்த மசோதா வாக்கெடுப்புக்கு அனுப்பப்படும் என்றும், அதன் பின் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு நாட்களிலும், பணி நேரம் முடிந்த பின்னரும் அலுவலக மேல் அதிகாரிகளிடமிருந்து மின்னஞ்சல் வந்து அந்த பணியை முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva