வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (16:49 IST)

விஞ்ஞானிகள் சிக்னல் குடுத்துட்டா தடுப்பூசி போட ஆரம்பிச்சிடலாம்! – பிரதமர் மோடி

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்படுத்துவது குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் மொத்தமாக கிட்டத்தட்ட 1 கோடியை நெருங்கியுள்ளது. இந்நிலையில் இதுவரை 5 கொரோனா தடுப்பூசிகள் கொரோனாவை தடுக்க வல்லவை என உலக அளவில் நிரூபணம் ஆகியுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகம் குறித்து இன்று மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களோடு பிரதமர் மோடி காணொளி வாயிலாக பேசினார்.

அப்போது அவர் “இந்தியாவில் மொத்தம் 8 வகையான தடுப்பூசிகள் இறுதிகட்ட சோதனையில் உள்ளன. தடுப்பூசியின் விலை குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தடுப்பூசி கட்டணம் சிறந்ததாக உள்ளது. அடுத்த சில வாரங்களில் தடுப்பூசி தயாராகிவிடும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்” என கூறியுள்ளார்.

மேலும் விஞ்ஞானிகள் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், விஞ்ஞானிகள் பச்சை சிக்னல் கொடுத்ததும் தடுப்பூசி விநியோக பணிகள் துரிதப்படுத்தப்படும் என தெரிவித்துள்ள அவர், தடுப்பூசி முதலாவதாக முன்கள பணியாளர்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்களின் பரிந்துரைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.