1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 6 ஜனவரி 2022 (12:29 IST)

பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு: நாளை விசாரணை!

பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. 

 
பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.42,750 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி பஞ்சாப் சென்றார். வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணத்தை ரத்து செய்து காரில் பெரோஸ்பூர் நோக்கி சென்றார்.
 
அப்போது நெடுஞ்சாலை ஒன்றில் பிரதமரின் கார் சென்று கொண்டிருந்தபோது போராட்டக்காரர்கள் சாலையை வழிமறித்ததால் 20 நிமிடங்கள் பிரதமர் மோடியின் கார் மேம்பாலத்தில் நின்றது. பின்னர் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பிரதமரின் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்தது.
 
இந்நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைத்தது பஞ்சாப் அரசு. மூன்று நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
அதோடு பஞ்சாப்பில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. வழக்கறிஞர் மனிந்தர்சிங்கின் முறையீட்டை ஏற்று வழக்கை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடக்காத வகையில் உத்தரவுகளை பிறப்பிக்க மனிந்தர்சிங் கோரிக்கை வைத்தார்.