1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 10 மே 2024 (17:34 IST)

உதயநிதி மனு மீது பதிலளிக்க நோட்டீஸ்..! பல்வேறு மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Udayanithi
சனாதனம் குறித்து சர்ச்சை பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை ஒரே வழக்காக தொகுத்து விசாரிக்க கோரி தமிழக அமைச்சர் உதயநிதி தாக்கல் செய்த மனு குறித்து பதிலளிக்கும்படி பல்வேறு மாநில அரசுகளுக்கும், அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
 
கடந்த ஆண்டு செப்டம்பரில், சென்னையில் நடந்த மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி, ‛மலேரியா, டெங்கு நோய்கள் போல், சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என்றார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
 
மேலும் உதயநிதியின் பேச்சுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே அனைத்து மாநிலங்களிலும் தொடுக்கப்பட்ட வழக்குகளை தொகுத்து ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் உதயநிதி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, உதயநிதி தரப்பில் திருத்தம் செய்யப்பட்ட மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.

 
மேலும் உதயநிதியின் கோரிக்கை குறித்து பதிலளிக்கும்படி பல்வேறு மாநில அரசுகள் மற்றும் அவருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.