வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 11 ஜூலை 2022 (12:57 IST)

இறந்த குழந்தை மடியில்.. கண்ணீருடன் சிறுவன் வீதியில்! – மனதை உலுக்கிய சோக சம்பவம்!

மத்திய பிரதேசத்தில் இறந்துபோன 2 வயது குழந்தையை மடியில் வைத்தபடி சிறுவன் ஒருவன் தெருவில் அமர்ந்திருந்த சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் மொரெனா மாவட்டத்தில் உள்ள பட்ஃப்ரா கிராமத்தை சேர்ந்தார் பூஜாராம். கூலித் தொழிலாளியான இவருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் அதில் 2 வயது குழந்தையான ராஜாவுக்கு கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜாவை பூஜாராம் அங்குள்ள மொரேனா மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை ராஜா அங்கு உயிரிழந்தான். குழந்தையின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனரை அணுகியுள்ளார் பூஜாராம். அதற்கு அந்த ஓட்டுனர் ரூ.1,500 ரூபாய் கேட்டுள்ளார். கூலித் தொழிலாளியான பூஜாராமிடம் அவ்வளவு தொகை இல்லாததால் மருத்துவமனையில் உதவி கேட்டுள்ளார்.

அவர்களும் உதவி செய்யாத நிலையில் தனது இறந்த குழந்தையை தனது 8 வயது மகனான குல்ஷான் மடியில் கிடத்திவிட்டு வேறு வாகனம் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க பூஜாராம் சென்றுள்ளார். என்ன நடக்கிறது என்று புரியாமல் இறந்த தன் தம்பியின் உடலை மடியில் வைத்துக் கொண்டு குல்ஷான் என்ற அந்த சிறுவன் அழுதுக் கொண்டிருந்த காட்சி பார்ப்போர் மனதை உலுக்கியது. இதை படமெடுத்து பலர் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டனர்.

இதுகுறித்து அறிந்த போலீஸார் அங்கு விரைந்து மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி ஆம்புலன்ஸை ஏற்பாடு செய்து பூஜாராமுக்கு உதவியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மொரேனா மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.