1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 30 மே 2024 (15:47 IST)

ஜாமீனை நீட்டிக்க கோரிய கெஜ்ரிவாலின் மனு..! அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!!

arvind kejriwal
இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது
 
நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு ஜுன் 1-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. 
 
இதனிடையே மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. 
 
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு  விசாரணைக்கு வந்த போது, இடைக்கால ஜாமீனை நீட்டிக்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை ஜூன் ஒன்றாம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.