1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2019 (19:21 IST)

லஞ்சம் கேட்பவர்களை நானே கவனிக்க போறேன்! – அலறவிடும் ஜெகன் மோகன் ரெட்டி!

ஆந்திர முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் புதிய புதிய மாற்றங்களை செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆந்திர மக்கள் எளிதில் அரசு சலுகைகளை பெறவும் அரசு அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும் குடிமக்கள் உதவி மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அப்போது மக்களிடம் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் பற்றி புகார் அளிக்க 14400 என்ற ஹெல்ப்லைன் எண்ணை அறிமுகம் செய்தார்.

இதுகுறித்து பேசிய ஜெகன் மோகன் ரெட்டி ”ஊழலுக்கு எதிராக எடுக்கப்படும் இந்த நடவடிக்கையில் மக்கள் அரசோடு கை கோர்க்க வேண்டும். லஞ்சம் தொடர்பான புகார்களை நானே தனிப்பட்ட முறையில் கண்காணிக்க உள்ளேன்.

ஆந்திராவை லஞ்சம் இல்லாத மாநிலமாக மாற்ற மக்கள் முன்வர வேண்டும். இந்த ஹெல்ப்லைனில் மக்கள் தொடர்பு கொண்டு எந்த அதிகாரி லஞ்சம் பெற்றாலும் அதுகுறித்து தெரிவிக்கலாம். அவர்களது புகார்கள் மீது 15 முதல் 30 நாட்களுக்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்பு அரசு அதிகாரிகளை அலற விட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜெகனின் நேரடி கட்டுப்பார்ருக்குள் லஞ்ச ஒழிப்பு செல்வதால் சிக்கி விடக்கூடாது என்பதில் அதிகாரிகள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அதனால் லஞ்சம் பெறும் பழக்கம் அதிகாரிகளிடம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.