1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2019 (09:46 IST)

விக்ரம் லேண்டரின் ஆன்டெனாவை மாற்றியமைக்க முயற்சியா??

விக்ரம் லேண்டரின் ஆன்டெனாக்களை மாற்றியமைக்க முயற்சி நடைபெறுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ள சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இதனை தொடர்ந்து நிலவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது. அதன் பின்பு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, நிலவுக்கு 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் முயற்சியை கைவிடாத இஸ்ரோ விஞ்ஞானிகள், இரண்டு நாட்களுக்கு முன்பு, நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டரின் மூலம், விக்ரம் லேண்டர், நிலவின் திட்டமிடப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் சாய்ந்து கிடப்பதாக கண்டறிந்தனர். லேண்டரில் எதுவும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என கண்டறிய முயன்ற போது லேண்டரில் எந்த வித சேதமும் இல்லை என தெரியவந்தது.

இந்நிலையில் விக்ரம் லேண்டரிலிருந்து எந்த தகவலும் வரவில்லை என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டருக்கு தொடர்பு கொள்ள தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.

விக்ரம் லேண்டர் மற்றும் அதனுள் இருக்கும் பிரக்யான் ரோவர் ஆகியவைக்கு 14 நாட்கள் தான் ஆயுட்காலம் என கூறப்படுகிறது. இந்த 14 நாட்களில் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் இந்த முயற்சி தோல்வி தான். ஆனால் ஏற்கனவே 4 நாட்கள் முடிந்துவிட்டன, இன்னும் 10 நாட்களே இருக்கின்றது.

இந்நிலையில் தகவல் தொடர்பினை மீட்டெடுக்க, விக்ரம் லேண்டரின் ஆன்டென்னாக்களை மாற்றி அமைக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் லேண்டர் கீழ் நோக்கி வந்தபோது, வேகத்தை குறைத்துக்கொள்கையில் சென்சார் அல்லது லேண்டரின் சாஃப்ட்வேர், கம்ப்யூட்டர் ஒழுங்கின்மையால் விழுந்திருக்கூடும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.