1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : சனி, 2 மே 2020 (08:34 IST)

சிறப்பு ரயில்கள் இயக்க அனுமதி! – ஆனால் எல்லாரும் போக முடியாது!

வெளி மாநிலங்களில் சிக்கியுள்ள பயணிகள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப சிறப்பு ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பேருந்து, ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள், புலம்பெயர் பணியாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தங்களை சொந்த மாநிலங்களுக்கு திரும்ப அரசு அனுமதிக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நாட்டில் கொரோனா பாதிப்புகள் சரியாகாத நிலையில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் விருப்பப்பட்டால் தொழிலாளர்களையும், பயணிகளையும் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

ஆனால் எல்லாராலும் இந்த பயணத்தை மேற்கொள்ள முடியாது. வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்கள், சுற்றுலா சென்ற மக்கள் மற்றும் தொழிலாளர்கள் தவிர பிறருக்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது. இதற்காக முன்கூட்டியே பதிவு செய்வது அவசியம். மேலும் செயல்படுத்தப்படும் சிறப்பு ரயில்கள் பாயிண்ட் டூ பாயிண்டாக மட்டுமே செயல்பட வேண்டும். பயணிப்பவர்களுக்கு தேவையான குடிநீர், ஊனவு பொருட்களை சம்மந்தபட்ட மாநில அரசுகள் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.