1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூன் 2022 (17:53 IST)

நபிகள் நாயகம் சர்ச்சை; நாடு முழுவதும் போராட்டம்! – மாநிலங்களை எச்சரிக்கும் உள்துறை!

Islamic protest
நாடு முழுவதும் நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

பாஜக தேசிய பெண் செய்தி தொடர்பாளரான நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்த நிலையில் பாஜக தலைமை நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியது.

இந்த விவகாரத்தில் இந்திய அரசும் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது. எனினும் நபிகள் குறித்து அவதூறாக பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய வேண்டும் என்றும், சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஞ்சாப், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இஸ்லாமிய மக்கள் பலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல இடங்களில் போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்த நிலையில் மாநில போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் பல பகுதிகளில் போராட்டங்களை அடக்கியுள்ளனர். நாடு முழுவதும் இந்த போராட்டத்தால் பரபரப்பு எழுந்துள்ள நிலையில் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.