வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (08:53 IST)

கேரளாவில் தொடர் கனமழை எதிரொலி: கொச்சி விமான நிலையம் மூடல்

கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் உள்ள சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொச்சி பகுதியில் இரண்டு நாட்கள் பெய்த தொடர் கனமழையால் அந்நகரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளடு.
 
இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் வரும் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை மூடப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வது பாதிக்கப்பட்டுள்ளது.  மேலும் கனமழை காரணமாக கேரளாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் கேரளா மாநிலம் கல்பேட்டா என்ற பகுதியில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து தரைமட்டமான வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. நல்லவேளையாக வீடு இடிந்து விழுந்த போது வீட்டில் யாரும் இல்லை என்பதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 
 
மேலும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தொகுதியான வயநாடு பகுதியில் கன மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பல பொதுமக்கள் பலியாகியிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு குறித்த தகவல் தெரிந்தவுடன் மீட்புப்படையினர் வயநாடு நோக்கி விரைந்துள்ளனர்
 
நிலச்சரிவில் சிக்கிய மக்கள், உதவி கோரி சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். இருப்பினும், மழை மற்றும் வெள்ளத்தால், அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினர் அந்த பகுதியை அடைய முடியவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது