வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2019 (08:04 IST)

நல்ல சாலைகளால்தான் அதிக விபத்துக்கள்: துணைமுதல்வரின் சர்ச்சை பேச்சு

நல்ல சாலைகள் இருப்பதால் தான் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் வேகமாக செல்வதாகவும் இதனால்தான் அதிக விபத்துகள் ஏற்படுவதாகவும் கர்நாடக துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் தெரிவித்துள்ளார்.
 
 
சித்ரதுர்காவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகாவில் சுமார் 10 ஆயிரம் விபத்துகள் நேரிடுவதாகவும், மோசமான சாலைகள் தான் விபத்துகள் ஏற்பட காரணம் என்று மீடியாக்களில் செய்தி வெளிவந்து கொண்டிருப்பதாகவும், ஆனால் நல்ல சாலைகளில் தான் அதிக விபத்துகள் நிகழ்வதாகவும் தெரிவித்தார். 
 
 
நல்ல சாலைகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் வாகனங்களை ஓட்டி செல்வதால்,  அதிக விபத்துகள் நிகழ்வதாக குறிப்பிட்ட துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் மோசமான சாலைகளால் பெரும்பாலும் விபத்துகள் நிகழ்வதில்லை என்றும் கூறினார்.
 
 
ஒரு மாநில அரசு நல்ல சாலைகளை மக்களுக்கு அமைத்து கொடுத்துவிட்டு அந்த சாலைகளில் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டுமே தவிர, ஒரு பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு  துணை முதலமைச்சர் கோவிந்த் கர்ஜோல் இவ்வாறு பேசுவது அவரது பதவிக்கு உகந்தது அல்ல என்று எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.