1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 8 மார்ச் 2024 (11:59 IST)

சிறுமி கொலை வழக்கு..! முழு அடைப்பு..! போராட்டம்.! தள்ளு முள்ளு - பதற்றம்.!!

Pondy Shut Down
சிறுமி படுகொலையை கண்டித்து புதுச்சேரியில் அதிமுக மற்றும் இந்தியா கூட்டணி சார்பில் தனித்தனியாக முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் போலீஸாருக்கும் இந்திய கூட்டணி கட்சியினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் புதுச்சேரியில் பதற்றம் நிலவி வருகிறது.
 
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கைதான நிலையில், அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி மக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் அதிமுக சார்பிலும் இந்தியா கூட்டணி சார்பிலும் தனித்தனியாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 
 
இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள வணிகம் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. குறிப்பாக வர்த்த தளம் என்று அழைக்கப்படும் அண்ணா சாலை, காந்திவீதி, நேரு வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
 
Police
மேலும் புதுச்சேரியில் பேருந்துகள் ஏதும் இயக்கப்படவில்லை. தமிழக அரசு பேருந்துகளும் எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. டெம்போ, ஆட்டோ போன்ற போக்குவரத்து இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முழு அடைப்பு காரணமாக புதுச்சேரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
மேலும் சிறுமி படுகொலையை கண்டித்து புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்ட இந்தியா கூட்டணி கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் லேசான தடியடி நடத்தியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.