1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 7 டிசம்பர் 2016 (19:26 IST)

ரூ. 600 கோடியில் திருமணம் நடத்திய ரெட்டியின் கார் ஓட்டுநர் தற்கொலை

ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிரமானிக்கும், ஹைதரபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விக்ரம் தேவாரெட்டியின் மகன் ராஜிவ் ரெட்டிக்கும் நவம்பர் 16ஆம் தேதி புதன்கிழமை அன்று திருமணம் நடைபெற்றது.


 

மணமகள் பிராமணி அணிந்த முகூர்த்த புடவையின் விலை ரூ.17 கோடி எனவும், நெற்றிச்சுட்டி, தலை அலங்காரம் என எல்லா வைர நகைகளும் சேர்ந்து மொத்தம் 90 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது.

5 ஹெலிபேடுகள், 1,500 நட்சத்திர ஹோட்டல்கள், திருமணம் நடைபெறும் இடம் அரண்மனை போன்று 38 ஏக்கர் நிலத்தில் செட்டுகள், திருமணத்திற்காக இந்தோனேஷியா, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து அரிய வகை மலர்கள் என பணத்தைக் கொட்டிக் குவித்தார் ரெட்டி.

தனது ஒரே மகளின் திருமணத்தை சுமார் ரூ.600 கோடி செலவில் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததும். மேலும், கருப்புப் பணத்தை ஒழிப்பதாக கூறிய மோடியின் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களே திருமணத்தில் கலந்து கொண்டதும் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பெங்களூருவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி வருமான வரித்துறையிடம் புகார் மனு அளித் துள்ளார். இதையடுத்து கர்நாடக மாநிலம் ஒபுலாபுரத்தில் உள்ள ஜனார்தன ரெட்டியின் சுரங்க நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

இந்நிலையில், ஜனார்தன ரெட்டியின் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 100 கோடி கறுப்புப்பணம் மாற்றப்பட்டதைத் தெரிந்து கொண்டதால் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக அவர் எழுதி வைத்துள்ளார். மேலும், அதில் மேலும் கருப்பு பணத்தை மாற்ற ஜனார்தன ரெட்டி, அந்த கர்நாடக உயரதிகாரிக்கு 20 சதவீதம் கமிஷன் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.