1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 5 மார்ச் 2020 (15:50 IST)

வாக்காளர் அட்டையில் நாயின் புகைப்படம்… அதிர்ந்துப்போன முதியவர்

மேற்கு வங்க மாநிலத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டையில் நாயின் புகைப்படம் இருந்ததால் முதியவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தின் ராம் நகர் கிராமத்தைச் சேர்ந்த சுனில் கர்மாகர் என்ற முதியவர், தனது வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பித்துள்ளார்.

அதன் பிறகு, திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை வாங்கிய முதியவர் அதிர்ந்துப்போயுள்ளார். அந்த அட்டையில் முதியவரின் புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் இருந்துள்ளது. இது குறித்து முதியவர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். மேலும், அதிகாரிகள் தனது கவுரவத்துடன் விளையாடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். வட்டார வளர்ச்சி அலுவலகரிடம் புகார் அளிக்கவும் உள்ளார்.

இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜரிஷி சக்ரவர்த்தி, “அட்டையில் நாய் புகைப்படம் இடம்பெற்றது கவலைக்குரிய விஷயம், ஆன்லைன் விண்ணப்பம் மூலம் அட்டை தயாரிக்கும் போது, அதிகாரி ஒருவரால் தவறு நடந்துள்ளது. தவறு சரி செய்யப்படும். திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மீண்டும் புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும்” என கூறியுள்ளார்.