செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 மே 2019 (08:13 IST)

ராகுல்காந்தியின் 21ஆம் தேதி கூட்டம் திடீர் ரத்து! காரணம் இதுதான்!

மக்களவை தேர்தலின் கடைசிகட்ட வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அடுத்த ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரும் 21ஆம் தேதி ஆலோசனை கூட்டம் ஒன்றை டெல்லியில் நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த கூட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர் அழைப்பது குறித்தும் பரிசீலனை செய்து வந்தார்.
 
இந்த நிலையில் மாநில கட்சி தலைவர்கள் பலர் மூன்றாவது அணி அமைத்து பிரதமர் கனவில் இருப்பதால் காங்கிரஸ் கூட்டும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று தகவல் வெளிவந்தது. குறிப்பாக மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகரராவ், நிதிஷ்குமார் ஆகிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று கூறப்பட்டது. ராகுல்காந்தி தான் அடுத்த பிரதமர் என்று அறிவித்த ஒரே தலைவரான மு.க.ஸ்டாலின் கூட இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தன்னுடைய பிரதிநிதி ஒருவரை அனுப்ப திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளிவந்தது
 
இந்த நிலையில் டெல்லியில் ஏற்பாடு செய்திருந்த 21ஆம் தேதி கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக காங்கிரஸ் தற்போது அறிவித்துள்ளது. 23ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் கவனம் செலுத்தவே இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டதாகவும், 23ஆம் தேதிக்கு பின்னர் ஒருநாளில் இந்த கூட்டம் கூடும் என்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது