1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 27 டிசம்பர் 2022 (16:17 IST)

பேச மறுத்த காதலி; 51 முறை குத்தி கொன்ற காதலன்! – சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்!

சத்தீஸ்கரில் தன்னிடம் பேச மறுத்த காதலியை ஸ்க்ரூ ட்ரைவரால் 51 முறை கொடூரமாக குத்தி கொன்ற காதலனை போலீஸார் தேடி வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள ஜாஷ்பூரை சேர்ந்தவர் துத்ராம் பன்னா. இவரது 20 வயது மகள் நீல்குஷம். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நீல்குஷம் மதன்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். அவர் பள்ளிக்கு பேருந்தில் சென்று வந்த நிலையில், அந்த பேருந்தின் நடத்துனரான ஷபாஸ் கான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கிடையேயான பழக்கம் காதலாக மாறிய நிலையில் ஷபாஸ்கான் சில மாதங்களுக்கு முன்னதாக வேலைக்காக குஜராத் சென்றுள்ளார். அதன்பின்னர் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை குறைந்ததுடன், அடிக்கடி சண்டையும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் நீல்குஷம் ஷபாஸ்கானுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார்.


இதனால் கோபமடைந்த ஷபாஸ்கான் குஜராத்தில் இருந்து விமானம் மூலமாக ராய்ப்பூர் வந்து அங்கிருந்து பிலாஸ்பூர் வந்துள்ளார். பின்னர் நீல்குஷமை பார்க்க சென்றுள்ளார். நீல்குஷம் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த ஷபாஸ்கான், நீல்குஷமின் முகத்தை தலையணையால் மூடி மார்பு, வயிறு, கை என பல பகுதிகளில் ஸ்க்ரூ ட்ரைவரால் சரமாரியாக குத்தியுள்ளார். 51 முறை கொடூரமாக குத்தியதில் நீல்குஷம் ரத்த வெள்ளத்தில் பலியானார். அங்கிருந்து ஷபாஸ்கான் தப்பித்து சென்றுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் ஷபாஸ்கானை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K