1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 9 மே 2024 (17:07 IST)

பா.ஜ.க.வுடன் விவாதம் செய்ய தயாரா.? ராகுல், பிரியங்கா காந்திக்கு ஸ்மிருதி இராணி சவால்.!!

Smruthi Rani
பாஜக உடன் விவாதம் செய்ய தயாரா என்று ராகுல் காந்திக்கும், பிரியங்கா காந்திக்கும், மத்திய அமைச்சரும், அமேதி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார்.
 
80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாக்கு சேகரித்து வருகிறார். 
 
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, நரேந்திர மோடி தனது நண்பர்களின் ரூ.16 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்தார் ஆனால், விவசாயிகளின் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.  வேலை வாய்ப்பு, பண வீக்கம், பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றை பற்றி பேசுமாறு பிரதமர் மோடிக்கு நான் சவால் விடுகிறேன் என்று பிரியங்கா காந்தி கூறினார். 
 
இந்த நிலையில், ராகுல் காந்திக்கும், பிரியங்கா காந்திக்கும், மத்திய அமைச்சரும், அமேதி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஸ்மிருதி இராணி சவால் விடுத்துள்ளார். பா.ஜ.க.வுடன் விவாதம் செய்ய எந்தச் சேனல், தொகுப்பாளர், இடம், நேரம் மற்றும் பிரச்சினையை தேர்வு செய்யுமாறு பிரியங்கா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அவர் சவால் விடுத்துள்ளார்.

 
ஒரு பக்கம், அண்ணன்-தங்கை ஜோடி இருக்கும் என்றும் மறுபுறம், பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர் இருப்பார் என்றும் பாஜகவில் இருந்து சுதான்ஷு திரிவேதியே போதும் என்றும் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.