வெள்ளி, 18 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 அக்டோபர் 2024 (16:04 IST)

பயங்கர வேகமாக வந்த பைக்! தங்கையை காப்பாற்றி உயிரிழந்த 8 வயது சிறுவன்!

Death

உத்தர பிரதேசத்தில் பிச்சை எடுத்து வாழ்ந்து வந்த சிறுவன் ஒரு விபத்திலிருந்து தனது தங்கையை காப்பாற்றி தான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

உத்தர பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுவன் அன்மோல், அவனது தங்கை ரேஷ்மா. அன்மோலின் தந்தை இவர்களை விட்டு பிரிந்து சென்று நேபாளத்தில் வசிப்பதாக கூறப்படுகிறது. தாயாரும் உடல் நலமற்று இருந்த நிலையில் அன்மோல் தனது தங்கையுடன் சென்று சாலையில் பிச்சை எடுத்து வர, அதை வைத்து அந்த குடும்பம் வாழ்க்கை ஜீவனம் செய்து வந்துள்ளனர்.

 

சமீபத்தில் அவ்வாறு பிச்சை எடுத்து அந்த காசில் தாயாருக்கு உணவு வாங்கி கொண்டு இருவரும் சாலையை கடந்து சென்றுள்ளனர். அப்போது அதிவேகமாக ஒரு பைக் அவர்களை நோக்கி வந்துள்ளது. உடனடியாக தனது தங்கையை காப்பாற்ற நினைத்த அன்மோல், ரேஷ்மாவை சாலைக்கு வெளியே தள்ளி விட்டுள்ளான். ஆனால் சிறுவன் அன்மோல் நகர்வதற்குள் பைக் வேகமாக வந்து மோதி சிறுவனை தூக்கி வீசியது.
 

 

இதில் கை, கால்கள் முறிந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுவனை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக பலியானான். இந்த சம்பவத்தில் சிறுவன் தரப்பில் இருந்து வழக்குப்பதிவு செய்யக் கூட யாரும் இல்லாத சூழலில், விபத்து நடந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸாரே வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய நபரை தேடி வருகின்றனர்.

 

Edit by Prasanth.K