1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2019 (10:15 IST)

மணி ரத்னம் மீதான தேச துரோக வழக்கை திரும்ப பெற முடிவு..

பிரதமருக்கு கடித எழுதியதாக இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்கு பாய்ந்த நிலையில், அந்த வழக்கை தற்போது திரும்ப பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஆங்காங்கே மதத்தின் பெயரால், சிறுபான்மையினர் மற்றும் பட்டியலினத்தவர்கள் மீதும் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவம் நடந்துவருகிறது. குறிப்பாக இஸ்லாமியர்கள் மதத்தின் பெயரால் கொல்லப்படும் கொடூரமும் நடந்துவருகிறது. இதனிடையே இது போன்ற தாக்குதல்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், இதனை உடனே தடுக்கவேண்டும் எனவும் இயக்குனர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் கடந்த ஆகஸ்து மாதம் மோடிக்கு தனது கையொப்பங்களை இட்டு கடிதம் எழுதினர்.

இதனையடுத்து மோடிக்கு கடிதம் எழுதிய அந்த 49 பிரபலங்கள் மீதும், நாட்டின் நற்பெயரை கெடுத்தல் மற்றும் பிரிவினைவாத போக்குகளை ஆதரவளித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் பீகார் முஸாஃபர் நகர் போலீஸாரிடம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தேச துரோகம், மற்றும் உணர்வுகளை புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் முஸாஃபர் நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதனை தொடர்ந்து “பிரதமருக்கு கடிதம் எழுதினால் தேச துரோக வழக்கா?” என பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் முக ஸ்டாலின், முத்தரசன், வைகோ, திருமாவளவன்,  உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அந்த 49 பேர் மீதான தேச துரோக வழக்கை முஸாஃபர் நகர் போலீஸார் திரும்ப பெற முடிவு செய்துள்ளனர். இது குறித்து பீகார் போலீஸார், மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் மாநில போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதனால் இயக்குனர் மணிரத்னம் உட்பட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை திரும்ப பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.