வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 15 ஜூலை 2019 (20:09 IST)

இந்தியாவில் 1 கோடியே 60 லட்சம் போலி இன்ஸ்டாக்ராம் அக்கவுண்ட்கள்- அதிர்ச்சி ரிப்போர்ட்

சமூக வலைதளங்களில் பலர் போலி அக்கவுண்ட்கள் வைத்திருப்பர். ஆனால் பிரபலமான நிறுவனங்களின் பெயரில் போலி அக்கவுண்ட்கள் தொடங்கி மோசடி செய்யும் இன்ஸ்டாக்ராம் அக்கவுண்ட்கள் இந்தியாவில் 1 கோடியே 60 லட்சம் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

சமூக வலைதளங்களில் நடைபெறும் மார்க்கெட்டிங் முறையை பற்றி கூகுளுடன் இணைந்து ஹைப் ஆடிட்டர் என்ற நிறுவனம் கணக்கெடுப்பு ஒன்றை மேற்கொண்டது. இதன்மூலம் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம் போன்ற தளங்களில் நடைபெறும் விளம்பரங்கள், விற்பனைகள், அதன் நம்பக தன்மை ஆகியவற்றை ஆராய்ச்சி செய்தனர்.

அப்போது இன்ஸ்டாக்ராமில் பிரபல நிறுவனங்கள் பெயரிலும், போலி பெயர்களிலும் போலி ஐடிகள் சுமார் 1 கோடியே 60 லட்சம் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதிக வர்த்தக போலி கணக்குகள் உள்ள நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் அமெரிக்காவும் (4 கோடியே 90 லட்சம்), இரண்டாவது இடத்தில் பிரேசிலும் (2 கோடியே 70 லட்சம்) உள்ளன.

இந்த போலி கணக்குகளில் பல ரஷ்யன் பாட் எனப்படும் ஆட்டோமேட்டிக் அக்கவுண்ட் உருவாக்கும் செயலியால் உருவாக்கப்படுபவை. பிரபல நிறுவனங்கள் பெயரால் உருவாக்கப்படும் இந்த கணக்குகளை பலர் ஃபாலோ செய்ய தொடங்குவார்கள். கணிசமான அளவு ஃபாலோயர்ஸ் கிடைத்ததும் அந்த நிறுவனத்தின் ஒரு பொருளை சலுகை விலையில் விற்பதாக இன்ஸ்டாவிலேயே விளம்பரம் வரும். அந்த லிங்கை கிளிக் செய்து பொருளை வாங்க பணம் கட்டினால், பணம் போய்விடும் பொருள் வராது. பிறகுதான் தெரியவரும் அது அந்த நிறுவனத்தின் உண்மையான அக்கவுண்ட் இல்லை என்பது.

இதுபோலவே இன்னொரு மோசடியும் இருக்கிறது. அழகான பெண்கள் அல்லது ஆண்கள் புகைப்படத்தோடு சில அக்கவுண்ட்கள் இருக்கும். அடிக்கடி தினசரி நிகழ்வுகளை செல்பி எடுத்து பதிவிடுவர். அவர்களுக்கு எக்கசக்க ஃபாலோயர்ஸ் இருப்பார்கள். ஒருநாள் விலை அதிகம் உள்ள ஒரு பொருளை சலுகை விலையில் வாங்கியதாக போட்டோ போடுவார். அந்த பொருளை வாங்கவேண்டிய லிங்கையும் தருவார்கள். பலர் இவர்தான் வாங்கியிருக்கிறாரே என்ற நம்பிக்கையில் அதற்குள் சென்று பொருளை ஆர்டர் செய்து ஏமாந்து விடுவர்.

இதுபோல இல்லாத கம்பெனிகளின் பெயரிலும் அக்கவுண்ட் தொடங்கி திடீர் ஆஃப்ர்களை அள்ளி தருவதாக விளம்பரப்படுத்தி பணம் பறிக்கும் கும்பலும் இருக்கின்றன. பொதுமக்கள் இது குறித்த சரியான விழிப்புணர்வை பெறுதல் அவசியம்.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் சலுகை விலை விளம்பரங்கள் வந்தாலும் அந்த பொருள் விற்கும் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்திற்கு சென்று அப்படி ஏதேனும் ஆஃபர் இருக்கிறதா என சோதித்துவிட்டு வாங்குவது நல்லது. அதேபோல இன்ஸ்டாக்ராமில் இதுபோன்ற விற்பனை நிறுவனங்களை ஃபாலோ செய்யும் முன்பு வெரிஃபைட் செய்யப்பட்ட குறி இருக்கிறதா என்பதை தெளிவுப்படுத்திக் கொண்டு ஃபாலோ செய்யவேண்டும்.