வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சுற்றுலா
  3. சுற்றுலாத் தலங்கள்
Written By
Last Modified: ஞாயிறு, 26 மே 2019 (14:38 IST)

எவரெஸ்ட் போனா சாவுதான் – ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

என்றைக்கு முதல்முதலா மனிதன் எவரெஸ்ட் உச்சியில கால் வைத்தானோ, அன்றிலிருந்தே எவரெஸ்ட் சிகரத்துக்கு போதாத காலம் தொடங்கிவிட்டது. தற்போது நேபாளத்தின் எல்லைக்குள் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தை வேடிக்கை பார்க்க வருடத்திற்கு லட்சக்கணக்கான பேர் வருகிறார்கள்.

வந்து வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு சென்றால் பரவாயில்லை. அதில் ஏறி பார்க்க ஆசைப்படும்போதுதான் ஆபத்து தொடங்குகிறது. எந்தவொரு அழகான பொருளுக்கும் பின்னால் சில ஆபத்துகளும் இருக்கும். என்னென்ன ஆபத்துகள் இருக்குனு தெரிஞ்சிக்க இதை முழுசா படிங்க!

ஆரம்ப காலகட்டங்களில் எவரெஸ்ட்தான் உலகிலேயே மிகப்பெரிய சிகரம் என்று உலகுக்கு தெரிய வந்தபோது மலை ஏற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களும், சாகச விரும்பிகளும் குழுவாக வந்து அரசு அனுமதியோடு மலையேற்றம் செய்வார்கள். அதிலும் உயிர்சேதம் உண்டு என்றாலும் அது தெரிந்துதான் அவர்கள் மலையேறவே சென்றார்கள். ஆனால் காலம் மாற மாற பல உள்நாட்டு, வெளிநாட்டு ஏஜென்ஸிகள் இந்த பணியை கையில் எடுத்துக்கொள்ள தொடங்கின. “சாதரண ஆட்கள் கூட மலையேறலாம். எங்கள் பயிற்சி பெற்ற வழிகாட்டி உங்களை எவரெஸ்டின் உச்சிக்கு பத்திரமாக அழைத்து செல்வார்” என விளம்பரப்படுத்தின. ஆனால் அந்த ஏஜென்ஸிகள் கேட்கும் தொகையை சாதாரண ஆட்கள் கொடுத்துவிட முடியாது. தற்போது மலையேற்றம் செல்பவர்களுக்கு ஏஜென்சிகள் வாங்கும் குறைந்தபட்ச தொகை 44000 டாலர்கள் (இந்திய மதிப்பின்படி 30லட்சத்து 52ஆயிரத்து 742 ரூபாய்). உங்கள் சொத்துக்கள் மொத்ததையும் விற்றாலும் கொடுக்க முடியாத அளவுக்கு தொகைகளும் உண்டு. ஏஜென்சிகளின் பேச்சை கேட்டு இவ்வளவு பணம் கொடுத்து வரும் பணக்காரர்கள் என்னவோ எவரெஸ்ட் மேலே ஏஜென்சிகள் ஸ்டார் ஹோட்டல் வைத்திருப்பதாக கனவு கண்டிருப்பார்களோ என்னவோ?

இப்படி ஏஜென்சிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி வருவோர் ஒரு பக்கம், எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை மனிதன் பார்க்காத அதிசய விலங்கு ஒன்று உள்ளது என்று இண்டியானா ஜோன்ஸை மூளைக்குள் செலுத்தி கொண்டு வருகிறது இன்னொரு கூட்டம்.  “எட்டி” என்று அழைக்கப்படும் அந்த அரிய விலக்கு மனிதனை மூன்று மடங்கு உயரமாக, பார்க்க வெள்ளை குரங்கு போல இருக்கும் என சொல்கிறார்கள். ஏற்கனவே எவரெஸ்ட் ஏறியவர்கள் எட்டியை பார்த்ததாக சொல்ல ஏஜென்சிகள் அதை வைத்து விளம்பரம் தேடி கொண்டன. எவரெஸ்டின் உயரமான பகுதிகளில் மட்டுமே வாழும் எட்டியை அவ்வளவு எளிதாக மனிதர்கள் பார்க்கமுடியாது, பார்த்தால் உயிரோடு திரும்ப முடியாது என்று கிளப்பிவிட்டார்கள். மலை ஏற வருவோர்களை விட எட்டியை பார்க்க ஆசைப்பட்டு மலையேறி உயிரை விட்டவர்கள் அதிகம்.



ஆனாலும் எவரெஸ்டில் மலையேற வருவோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. பாதியிலேயே ஏற முடியாமல், பனி சரிவுகளில் சிக்கி, பனி புயலில் மாட்டி, தவறி விழுந்து என ஏறிய பலபேர் திரும்ப வருவதே இல்லை. இதில் போகிற வழிகளில் அவர்கள் போட்டு செல்லும் குப்பைகளால் எவரெஸ்ட் இன்னும் கொஞ்ச வருடங்களில் குப்பை கிடங்காக மாறிவிடும் போல் இருக்கிறது. ஒருவேளை எட்டி இருந்தாலும் இவர்கள் செய்யும் காரியத்தால் அது முற்றிலுமாக அழிந்துவிடும்.

இந்த வாரத்தில் மட்டும் எவரெஸ்டில் ஏற சென்று இறந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களை எட்டி கொன்றதோ இல்லையோ, எவரெஸ்டை நாம் கொல்லாமல் இருக்க வேண்டும்.