1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (11:12 IST)

விநாயகர் சதுர்த்தி நாளில் வழிபட உகந்த நேரம் எது...?

Lord Ganesha 1
விக்னேஸ்வரன் அவதரித்த நாளாகக் கருதப்படும் விநாயகர் சதுர்த்தி நன்னாளில் நாள் முழுவதுமே பூஜை செய்துவழிபட உகந்ததுதான். என்றாலும் ராகு காலம், எம கண்டம் இல்லாத நேரமாகப் பார்த்து பூஜை செய்து வழிபடுவது சிறந்தது.


விநாயகர் சதுர்த்தி கணபதியை வழிபட நல்ல நேரம்: ஆகஸ்ட் 31ஆம் தேதி புதன்கிழமை காலை ப்ரம்ம முகூர்த்தத்தில் வழிபடுவதாக இருந்தால், காலை 4:00 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்யலாம். அல்லது காலை 6 மணி முதல் 7:15 மணி வரை வழிபாடு செய்யலாம். 9 மணி முதல் 12 மணி வரை அல்லது மாலை 6 மணிக்கு மேல் வழிபாடு செய்யலாம்

விநாயகர் திருவுருவத்தை மண்ணிலோ மஞ்சளிலோ அல்லது பிற மங்கலப் பொருள்களிலோ செய்து வழிபாடு செய்தால் மிகந்த பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பூமியில் இருந்து உருவான எதுவும் பூமிக்கே திரும்பப் போகவேண்டும் என்ற தத்துவம்தான் களிமண் பிள்ளையார். களிமண் மட்டும்தான் என்றில்லாமல், உலோகம், கற்சிலை விக்ரகங்களையும் வைக்கலாம்.

பத்ர புஷ்பம் எனப்படும் பல்வகைப் பூக்கள் கொண்ட கொத்து, எருக்கம்பூ மாலை, அருகம்புல், சாமந்தி, மல்லி என்று எத்தனை வகை பூக்களை வாங்க முடியுமோ, அவரவர் வசதிக்கேற்ப வாங்கிக் கொள்ளலாம். அதேபோல முடிந்த அளவுக்கு சில வகை பழங்களையும் வாங்கிக் கொள்ளலாம். இவை எல்லாவற்றையும் விட, விநாயகருக்கு மிகவும் பிடித்தமான மோதகத்தை செய்து கொள்ளலாம். அதாவது கொழுக்கட்டை. தேங்காய் பூர்ணத்தை உள்ளே வைத்து செய்யப்படுவது. இதிலும் ஒரு தத்துவம் இருக்கிறது. மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். உள்ளே இருக்கும் வெல்லப் பூர்ணம்தான் பிரம்மம். அதாவது நமக்குள் இருக்கும் இனிய குணங்களை மாயை மறைக்கிறது. இந்த மாயையை உடைத்தால் அதாவது வெள்ளை மாவுப் பொருளை உடைத்தால், உள்ளே இனிய குணமான வெல்லப் பூர்ணம் நமக்குக் கிடைக்கும்.

வெள்ளெருக்கில் பிள்ளையார் செய்து வணங்கினால் பில்லி, சூனியம் விலகும். செல்வம் உயரச் செய்வார். விபூதியால் விநாயகர் பிடித்து வழிப்பட்டால் உஷ்ண நோய்கள் நீங்கும். சந்தனத்தால் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.