பழனியில் தொடங்கியது பங்குனி உத்திரம் திருவிழா.. முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்..!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக பங்குனி உத்திரம் விளங்குகிறது. இந்த விழாவின் போது, பக்தர்கள் கொடுமுடியில் இருந்து புனித நீர் எடுத்துச் சென்று, மலைக்கோயிலில் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பாக இருக்கும்.
இந்த ஆண்டு பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருஆவினன்குடி கோயிலில் காலை 11 மணிக்குப் பிறகு, நண்பகல் 12 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினமும் இரவு, தங்க குதிரை, தங்க மயில், வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டுக்கிடா உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வருவார்.
ஏப்ரல் 10-ஆம் தேதி, திருவிழாவின் 6-ஆம் நாளில், மாலை 5 மணிக்கு மேல் வள்ளிநாயகி அம்மனுடன் திருமுருகன் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன் பிறகு, இரவு 8.30 மணிக்கு, மணக்கோலத்தில் வெள்ளி ரதத்தில் சுவாமி வீதி உலா வருவார்.
விழாவின் முக்கிய நிகழ்வாக, ஏப்ரல் 11-ஆம் தேதி பங்குனி உத்திர நாளில், தேரோட்டம் நடைபெற உள்ளது. மாலை 4.30 மணிக்கு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, கிரிவீதிகளில் உலா வருவார்கள். திருவிழாவின் நிறைவாக, அதே நாள் இரவு, தங்க குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலாவை முடித்து, கொடி இறக்கப்படும்.
விழா சமீபித்து வருவதால், பக்தர்கள் விரதமிருந்து, தீர்த்தக் காவடி எடுக்கத் தயாராகி வருகின்றனர்.
Edited by Mahendran