1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (12:08 IST)

தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம்.! புதுச்சேரி கடற்கரையில் குவிந்த மக்கள்.!!

thai amaavasai
தை அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரை, மற்றும் சங்கராபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து  வழிபட்டனர்.
 
சிவன், பெருமாள் சுவாமிகள் ஒன்றாக கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி வழங்குவது தை அமாவாசையில் மட்டுமே நிகழ்வதால், பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு ஆண்டுதோறும் தை அமாவாசையில் திதி கொடுப்பது வழக்கம்.
 
அதன்படி தை அமாவாசையான இன்று புதுச்சேரி கடற்கரையில் சுவாமி தீர்த்தவாரி நடைபெற்றது. லாஸ்பேட்டை சுப்பிரமணியர் கோயில், ரேணுகா பரமேஸ்வரி அம்மன், சுந்தர சபரீஸ்வரர் கோயில், மணக்குளவிநாயகர், காமாட்சி அம்மன், சுந்தரவினாயகர் கோயில், கௌசிகபாலசுப்பிரமணியர்,  தண்டுமுத்துமாரியம்மன், வரதராஜபெருமாள்,  உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புதுவை கடற்கரை காந்தி திடலுக்கு கொண்டுவரப்பட்டன.
 
dharbanam
அங்கு கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அங்கு திரளாக  சுவாமி தரிசனம் செய்தனர்.  புதுவை கடற்கரையில் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு காய்கறிகள் அரிசி உள்ளிட்டவை கொண்டு தர்ப்பணம் கொடுத்தனர். 


இதேபோல, தை அமாவாசையை முன்னிட்டு  முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி சங்கராபரணி, தென்பெண்ணை ஆற்று கரையோரங்களில் நடந்தது. இதிலும் ஏராளமானோர் தங்களின் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.