1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Some holy Tirthas in Tirupati and their Benefits !!

திருப்பதியில் சில புனித தீர்த்தங்களும் அதன் பலன்களும் !!

Tirupati - Thirthas
திருப்பதி திருமலையில் ஏராளமான தீர்த்தங்கள் காணப்படுகின்றன. சுவாமி புஷ்கரிணி: ஆதிவராக மூர்த்தி சன்னிதிக்கு அருகில் இந்த தீர்த்தம் உள்ளது. இதனை 'தீர்த்தங்களின் அரசி' என்று அழைக்கிறார்கள். இங்கு சரஸ்வதிதேவி தவம் இயற்றியதாக தல புராணம் சொல்கிறது. மிகவும் புனிதத் துவம் பெற்ற தீர்த்தம் இது.


குமார தீர்த்தம்: மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் தினத்தன்று (மாசி பவுர்ணமி), சகல தீர்த்தங்களும் வந்து இந்த தீர்த்தத்தில் தீர்த்தமாடுகின்றன. மனதிற்கு உற்சாகமும், உடலுக்கு இளமையும் தரும் இத்தீர்த்தத்தில் நீராடுபவர்கள், ராஜசூய யாகம் செய்த பலனைப் பெறுவர்.

தும்புரு தீர்த்தம்: இறைவனை தன்னுடைய நாம சங்கீர்த்தனத்தால் பாடும் தும்புரு முனிவர், திருப்பதி வெங்கடாஜலபதியை நினைத்து தவம் இருந்த இடத்தில் இருப்பதால் இதற்கு 'தும்புரு தீர்த்தம்' என்று பெயர். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று (பங்குனி பவுர்ணமி), இதில் நீராடுவோருக்கு பரமபதம் உண்டு.

ஆகாச கங்கை: தினந்தோறும் அதிகாலையில் இந்த தீர்த்தத்தாலேயே வேங்கடவனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. சகல பாபங்களையும் போக்கும் இத்தீர்த்தத்தின் அருகில் எண்ணற்ற ரிஷிகள் தவமிருந்தனர். அந்தக் காலத்திலேயே திருமலை நம்பிகள் தினமும் இந்த தீர்த்தத்தில் இருந்து ஒரு பெரிய குடத்தில் வேங்கடவனுக்கு அபிஷேக தீர்த்தம் எடுத்துக்கொண்டு நடந்தே வருவாராம். சகல சித்திகளையும் அளிக்கும் இத்தீர்த்தத்தில் சித்திரைமாதம் பவுர்ணமியன்று நீராடுவது மிக விஷேசம்.

பாண்டு தீர்த்தம்: வைகாசி மாதம் சுக்கிலபட்ச துவாதசியுடன் கூடிய செவ்வாய்க்கிழமையில் பல தீர்த்தங்கள் இதில் கூடுவதால், அப்போது இதில் நீராடுவோர் சகல பாவங்களில் இருந்தும் விடுபடுகின்றனர்.

பாபவிநாசன தீர்த்தம்: இத்தீர்த்தம் இயற்கை எழில் கொஞ்சும் சூழ்நிலையில் அமைந்துள்ளது. மிக சுவையுடன் விளங்கும் தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. ஐப்பசி மாதம் வளர்பிறை சப்தமி திதியும் உத்திராட நட்சத்திரமும் கூடிய ஞாயிற்றுக்கிழமையில் இதில் சில தீர்த்தங்கள் கூடுகின்றன. அன்றைய தினத்தில் இதில் நீராடுவோர் பெறுவதற்கரிய ஞானம் பெறுகின்றனர். பாவங்களினின்றும் விடுபடுகின்றனர்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
எந்த கிழமையில் எந்த தெய்வங்களை வணங்குவது சிறந்தது...?