1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 மார்ச் 2022 (09:43 IST)

பிரதோஷ நாளில் கோவிலை எவ்வாறு சுற்ற வேண்டும் தெரியுமா....?

பிரதோஷ நாளில் சிவன் மற்றும் நந்தியை கோவிலில் எவ்வாறு சுற்ற வேண்டும் என தெரிந்துக்கொள்ளுங்கள்...

 
சோமசூத்திர பிரதட்சணம்: 
 
இந்தக் காலத்தில் ஈசனின் சந்நிதியை "சோமசூத்திர பிரதட்சணம்" செய்வது என்பது மிகவும் விசேஷம். இதன் அடிப்படையில், நந்தி பகவானை தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திருப்பி வரவேண்டும். 
 
நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று வலமாக சென்று கோமுகி எனப்படும் சிவபெருனின் அபிஷேக நீர் வரும் துவார வழியே தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வர வேண்டும். 
 
நந்தியை மீண்டும் தரிசனம் செய்து அங்கு நின்று இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து சென்ற வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து வலமாக வர வேண்டும். திரும்பவும் கோமுகியை தரிசனம் செய்து மீண்டும் வந்த வழியே திரும்பி வந்து நந்தியை தரிசனம் செய்து இடப்புறமாக சென்று சண்டிகேஸ்வரரை தரிசனம் செய்து திரும்பி வரவேண்டும். இதற்கு ‘சோமசூத்திர பிரதட்சணம்’ என்று பெயர். இதனை பிரதோஷ காலத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.

 
ஆத்ம பிரதட்சணம்:
 
பிரதோஷ காலத்தில் நந்தியை தரிசனம் செய்த பின்னரே சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும். அதுவே விதி. சோமசூத்திர பிரதட்சணம் செய்த பின்னர் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு 'ஆத்ம பிரதட்சணம்' செய்ய வேண்டும். இதனால் செய்த பாவங்கள் விலகி நற்பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
 
இப்படியாகப் பிரதோஷ காலங்களில் கோயில் சுற்றுகையில் முதலில் சண்டிகேஸ்வரர் வரை, பிறகு தீர்த்த தொட்டி வரை என மாறி, மாறி சுற்றுவதன் மூலம் மீண்டும் பிறவா வரம் கிடைக்கப்பெறும். மோட்சம் சித்திக்கும். நாமும் பிரதோஷ காலத்தில் சோமசூத்திர பிரதட்சணம் செய்து அப்படியே ஈசனை வலம் வருவோம். நலம் பெறுவோம்.