வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. இன்றைய மங்கை
  3. நலமும் அழகும்
Written By Sasikala

இயற்கையான பொருள்களை கொண்டு முகத்தை பளிச்சிட செய்யும் குறிப்புகள்...!!

அன்றாடம் வெளியில் சென்று வந்ததும் வெளியிலிருக்கும் தூசு, மாசு, அழுக்குகள் முகத்தில் சருமத்தில் ஒட்டிக்கொள்ளும். அவை கண்ணுக்குத் தெரியாமல் சரும துவாரங்களில் அடைத்துக்கொள்ளும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரம் ஒருமுறையேனும்  நீக்குவது நல்லது.
பசும்பாலை நன்றாக காய்ச்சும் போது வரும் பாலாடையில் மஞ்சள்தூளைக் கலந்து நன்றாகக் குழைக்கவும். இதனை முகத்தில் கீழிருந்து மேலாக மசாஜ் செய்து பத்து நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவலாம். தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவடையும்.
 
வீட்டிலேயே அரைத்த கோதுமை மாவை சல்லடையில் சலித்தால் எஞ்சியிருக்கும் பொருள் தவிட்டுடன் சர்க்கரை கலந்து ஸ்க்ரப் போல  பயன்படுத்தினால், மூக்கின் நுனியில் உள்ள கரும்புள்ளிகள் வேரோடு வெளியேறும் மூக்கு அழகாக இருக்கும்.
 
பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு, வாழைப்பழங்களைக் கூழாக்கி பாலேடைக் கலந்தும் முகத்துக்கு ப்ளீச் செய்யலாம். ப்ளீச் செய்வதற்கு முன்பு முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவவும். ப்ளீச் செய்யும் போது முகத்துக்கு மட்டும் போடாமல் கழுத்துக்கும் போடுவது நல்லது.
 
15 நாட்களுக்கு ஒருமுறை ஆவி பிடித்தல் சருமத்துக்கு நல்லது. சூடான நீரை அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஒரு போர்வைக்குள் முகத்தையும் வெந்நீர் பாத்திரத்தையும் மூடி வெளிவரும் ஆவியை முகத்தின் மீது நன்றாக படும்படு காண்பிக்க வேண்டும். இது  சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். மெல்லிய துணியால் அழுந்த துடைத்ததும் மூக்கில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.
 
முகப்பருக்கள், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள், எண்ணெய் பசையுள்ள சருமம், வறண்ட சருமம் அனைத்துக்கும் ஏற்ற  சிறந்த சிகிச்சை முறை ஆவி பிடிப்பது மட்டும்தான். மாதம் இருமுறை ஆவி பிடித்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். விரைவில் சுருக்கம் வராது. நாளடைவில் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
 
அடுத்ததாக ஃபேஸ் பேக். எந்த கெமிக்கல் பூச்சும் போடாமால் சுத்தமான கடலை மாவில், கெட்டியான பசுந்தயிர் கொண்டு நன்றாக குழைத்து  முகத்தை கழுவி ஃபேஸ் பேக் போட்டு அரைமணிநேரம் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் முகம் பளிச். தொடர்ந்து இதை செய்துவந்தால் எப்போதும் மென்மையான அழகான சருமத்தை பெறலாம்.