வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. கட்டுரைகள்
Written By Sasikala
Last Modified: சனி, 6 மே 2017 (12:28 IST)

கோடையே போ! போ! - 2

கோடையின் அகோர பிடியில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கும் நமக்கு சில வகை உணவுகளும் தண்ணீரும்தான் கை கொடுக்கபோகின்றன. இந்த பருவகால மாற்றத்திற்கு ஏற்ப நாமும் நம் உணவு மற்றும் நீரில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்வது மிக நல்லது, காலம் மாற மாற அந்த காலகட்டத்திற்கு ஏற்ற உணவை எடுத்துக்கொண்டு காலத்திற்கு தகாத உணவுகளை விட்டொழிக்க வேண்டும்.

 
தண்ணீர் இந்த கோடையின் கொடை என்று சொல்லலாம்!, வியர்வை அதிகமாக வெளியேறுவதால் நம் உடலுக்கு நீர் அதிகமாக தேவைப்படும், எனவே நீர் அதிகமாக அறுந்தவேண்டும்.
 
இந்த கோடை நாட்களில் பெரியவர்கள் (10) முதல் (15) குவளைகள் நீர் அருந்தலாம், சிறியவர்கள் (8) குவளைகள் அருந்தலாம், சிறு குழந்தைகள் (5) குவளைகள் அருந்தலாம், குழந்தைகள் நன்றாக ஓடி ஆடி விளையாடுவதால் அவர்களுக்கு நீர் அதிகமாக தேவை! பெரியவர்களுக்கும் அவர்களின் உடல் உழைப்பின் தன்மைக்கேற்றவாறு நீர் அருந்துவது அவசியம்.
 
நீரை எப்படி குடிப்பது என்ற கேள்வி எழலாம், ஒரே நேரத்தில் (1) லிட்டர் அருந்தக்கூடாது, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அருந்தவேண்டும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒன்று அல்லது இரண்டு குவளைகள் அருந்தாலாம், இரவு தூங்கும் முன் ஒரு குவளை வெதுவெதுப்பான நீர் பருகி தூங்க செல்லுங்கள். இடைப்பட்ட காலத்தில் அரை குவளை அவ்வப்பொழுது அருந்துவது நலம்.
 
வெய்யிலில் வெளியே சென்றுவிட்டு வீடு வந்தவுடன் வெப்பத்தின் மிகுதியால் சிலர் அதிக நீரை வாசலில் நின்றபடியே குடிப்பார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு! வெய்யிலில் இருந்து வந்தவுடன் சற்று நேரம் அமர்ந்து வியர்வை ஆறியவுடன் நீர் அருந்தவேண்டும். உணவு உண்ணும் முன் அரை குவளை நீர் குடிக்கலாம், உணவு சாப்பிட்டவுடன் அரை குவளை குடிக்கலாம், உணவுக்கு முன்னும் பின்னும் அதிகப்படியான நீரை குடிப்பது நல்லதல்ல, உணவு உண்டு அரைமணி நேரத்திற்குப்பின் (3) குவளை குடிக்கலாம்!
 
காரணம் என்னவென்றால் உணவு வயிற்றில் போனவுடன் செரிக்க ஆரம்பிக்கும் அப்போது ஒரு அமிலம் நம் வயிற்றில் சுரக்கும்! அந்த அமில சூடு, நீர் அதிகமாக குடிக்கும்போது தன் தன்மையை இழக்கும், அதாவது நீர் அந்த சூட்டை குறைக்கும். இதனால் செரிமானம் தடைபடும், எனவே உணவு உண்ணும்பொழுது இடை இடையே அதிக நீரை குடிப்பது நல்லதல்ல, உணவு அடைப்பது போல இருந்தால் சிறிது நீரை குடிக்கவேண்டும் ஆனால் குளிர்ந்த நீர் கூடவே கூடாது. அதற்காக நீரை குடிக்காமலும் இருக்க கூடாது, காரணம், செரிமானத்திற்கு சிறிது நீரும் தேவை!
 
நீரை சில்லென்று குடிக்க ஆசையாக இருக்கும், இந்த பாடாய் படுத்தும் வெய்யிலில் (ஐஸ் வாட்டர்) குளிர்ந்த நீர் அருந்த ஆசை மிகும்!, இது உடலுக்கு கேடு விளைவிக்கும்,
 
எனவே இந்த குளிர்ந்த நீரை பருகுவதை கொஞ்சம் கொஞ்சமாக விட்டொழித்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். மேலும் சீரகம் இட்டு ஊறவைத்த நீரை பருகுவது அஜீரண கோளாறை போக்கி உடல் சூட்டை தணிக்கும்.
 
பாட்டிலில் அடைத்த பல நிற குளிர் பானங்களை குறிப்பாக கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்களை நினைத்தவுடன் குடிக்க ஆர்வம் அதிகரிக்கும், ஆனால் உடல் நலனில் அக்கறை இருந்தால் கண்டிப்பாக அந்த குளிர்பானங்களை தவிர்த்தால் கோடையை வென்றுவிடலாம்.
 
(மீண்டும் தொடர்வோம்)...
 
-த.நா.பரிமளச்செல்வி,
அக்குபங்க்சர் மருத்துவர்