வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. பண்டிகைகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஜனவரி 2018 (12:24 IST)

பழையன கழிந்து புதியன புகுதலே போகி பண்டிகை

மார்கழி மாதத்தின் இறுதி நாளையே போகிப் பண்டிகையாக தமிழ் நாட்காட்டியில் குறிப்பிடுகிறார்கள். மார்கழி மாதத்தின் இறுதி நாளை போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நோக்கத்தில், பயன்படுத்தப்படாத பழைய பொருட்களை தீயிட்டு எரிக்கப்படும். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். 
போகி தினம் பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது. அதனால் அவர்களுக்குப் பிடித்த உணவைப்   படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், புத்தாடைகளை வைத்து தீப ஆராதனைச் செய்து வணங்க வேண்டும்.  இதுவே அன்றைய காலங்களில் பின்பற்றப்பட்ட நம்பிக்கை. மிக முக்கியமாக இன்றைய தினத்தில் நம் தீய எண்ணங்கள், குணங்கள் எரிக்கப்பட வேண்டும். தைப் பிறக்கும் நாள் புதிய எண்ணங்களுடன் ஒரு புதிய மனிதனாக உருவெடுக்க வேண்டும் என்பதே இன்றைய நவீன காலத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
 
பழங்காலத்தில் போகி பண்டிகை ஒரு நம்பிக்கை அடிப்படையில் கொண்டாடப்பட்டதாம்.  இந்திரனுக்கு 'போகி' என்றொரு பெயர் உண்டு. மழைக்குரிய கடவுளாக இந்திரன் கருதப்பட்டார். அவரை வழிப்பட்டால், மழை பொழிந்து பயிர்கள் செழிக்கும் என  மக்கள் நம்பினர். பிற்காலத்தில் சூரிய பகவான் பற்றிய நம்பிக்கைகள் பரவ, அவர்தான் தங்கள் விளைச்சலுக்கு காரணம் என தீர்க்கமாக நம்பினர். அவருக்கே பொங்கல் வைத்து வழிப்பட்டனர். 
 
போகி உருவான இன்னொரு கருத்தும் உண்டு. பல துயரங்களை அழித்துப் போக்கும் இப்பண்டிகையைப் "போக்கி' என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி "போகி' என்றாகிவிட்டதாம். வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை  புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக்  கொண்டாடுகிறார்கள்.