1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 29 மே 2017 (15:41 IST)

கோலியின் முடிவு என் கையில் தான்: சீண்டும் பாகிஸ்தான் வீரர்!

கோலியின் முடிவு என் கையில் தான்: சீண்டும் பாகிஸ்தான் வீரர்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச அரங்கில் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவர் உலகின் சிறந்த வீரராக இருந்தாலும் எனது பந்துவீச்சை அவரால் தாக்குப்பிடிக்க முடியது என பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் கூறியுள்ளார்.


 
 
மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிராஃபி வரும் ஜூன் 1 முதல் ஆரம்பமாகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, இங்கிலாந்து, வங்க தேசம், நியூசிலாந்து உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கிறது.
 
இதன் B பிரிவில் பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இந்த அணிகள் மோதும் போட்டி ஜூன் 4-ஆம் தேதி பர்மிங்காமில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டியை காண மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
 
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை சீண்டும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
 
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய கடைசி நான்கு போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட்டை நான் மூன்று போட்டிகளில் வீழ்த்தியிருக்கிறேன். கோலி தலைசிறந்த வீரராக இருந்தாலும் எனது பந்துவீச்சை எதிர்கொள்வதில் அவர் தோல்வியடைந்து விட்டார் என்றார் ஜுனைத் கான்.