1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 22 மே 2017 (12:44 IST)

19-வது ஓவரில் நடுவர் செய்த தவறால் தோற்ற புனே அணி: ஸ்மித் அதிருப்தி!

19-வது ஓவரில் நடுவர் செய்த தவறால் தோற்ற புனே அணி: ஸ்மித் அதிருப்தி!

ஐபில் இறுதிப்போட்டி நேற்று இரவு நடைபெற்றது. மும்பை, புனே அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் புனேவை வீழ்த்தி திரில் வெற்றியை ருசித்தது. இதனால் புனே அணியின் வீரர்களும் ரசிகர்களும் கடும் அதிருப்தியடைந்தனர்.


 
 
முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் குவித்து 130 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்கை புனே அணிக்கு நிர்ணயித்தது. இதனால் புனே அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது.
 
ஆட்டத்தின் தொடக்கத்தில் தொடக்க ஆட்டக்காரர் த்ரிபாதிக்கு எல்பிடபுள்யூ முறையில் அவுட் கொடுத்தார் நடுவர். ஆனால் பும்ரா வீசிய அந்த பந்து ஸ்டெம்புக்கு மேலே செல்வது பின்னர் தெரியவந்தது. அதன் பின்னர் ஆட்டத்தின் முக்கியமான கட்டமான 19-வது ஓவரிலும் நடவர் தவறிழைத்தது தற்போது தெரியவந்துள்ளது.
 
19-வது ஓவரை மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீச வந்தார். அவர் வீசிய 5-வது பந்தை லாங் ஆப் திசையில் புனே அணியின் கேப்டன் ஸ்மித் சிக்சருக்கு பறக்கவிட்டார். இதனால் பதற்றமடைந்த பும்ரா 6-வது பந்தை ஸ்மித்துக்கு உயரமான ஒரு ஃபுல்டாஸ் பந்தாக வீசினார்.
 
அந்த பந்தில் 2 ரன்கள் எடுத்த ஸ்மித் நடுவர் நோ பால் தருவார் என எதிர்பார்த்தார். ஆனால் நடுவர் நோ பால் என அறிவிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஸ்மித் இடது பக்க நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பந்து இடுப்புக்கு மேலே வந்தது என சைகை மூலம் திரும்ப திரும்ப கூறினார். ஆனால் நடுவர் நோ பால் என அறிவிக்கவில்லை.
 
ஒருவேளை அந்த பந்தை நடுவர் நோ பாலாக அறிவித்திருந்தால், புனே அணிக்கு கூடுதலாக ஒரு ரன் கிடைத்திருக்கும் மற்றும் ஃப்ரீ ஹிட் ஒன்றும் கிடைத்திருக்கும் இதன் மூலம் புனே அணி எளிதாக வென்றிருக்கும்.