1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (09:03 IST)

‘பிசிசிஐ இப்படி செய்திருக்கக் கூடாது’… தவானுக்கு ஆதரவாக முன்னாள் வீரர்!

ஜிம்பாப்வே தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷிகார் தவான் பின்னர் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஜிம்பாப்வே செல்லும் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் கோஹ்லி இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் இடம்பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் முன்னணி வீரர்கள் பலருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த இளம் அணிக்கு ஷிகார் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது இந்த தொடருக்கான அணியில் கே எல் ராகுல் திடீரென்று சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஷிகார் தவான் தற்போது துணைக் கேப்டனாக மாற்றப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்த போட்டிகள் நடக்க உள்ளன.

இந்நிலையில் ஜிம்பாப்வே தொடரில் நடந்த இந்த மாற்றத்தை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சபா கரீம் விமர்சித்துள்ளார். அதில் “ராகுல் இப்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். அவரைக் கேப்டனாகவோ அல்லது துணைக் கேப்டனாகவோ நியமிப்பது முக்கியமில்லை. அவர் வெறும் வீரராகவே இந்த தொடரை விளையாடி இருக்கவேண்டும். ஷிகார் தவான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக விளையாடினார். அவர் தலைமையில் இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள். இப்படி திடீரென்று கேப்டனை மாற்றுவதால் வீரர்கள் குழப்பமடையக் கூடும்” எனக் கூறியுள்ளார்.