1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 16 மார்ச் 2024 (07:33 IST)

மைக்கேல் வாஹ்னை பங்கமாகக் கலாய்த்த ரிஷப் பண்ட்!

கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப் பட்டு வந்தது.

இதற்காக அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமியில் கடந்த சில மாதங்களாக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். அவரை பரிசோதித்த என் சி ஏ அவருக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது. இதையடுத்து தற்போது பிசிசிஐ ரிஷப் பண்ட் 100 சதவீத உடல் தகுதியோடு இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்குவது உறுதியாகியுள்ளது. அவர் மீண்டும் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் முன்னாள் வீரர்களான மைக்கேல் வாஹ்ன் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோர் ரிஷப் பண்ட்டை நேர்காணல் செய்தனர். அப்போது கில்கிறிஸ்ட், “உன் எதிர் அணியில் வாஹ்ன் இருந்தால் அவரை எப்படி ஸ்லெட்ஜ் செய்வாய்” எனக் கேட்டார். அதற்கு பண்ட் உடனடியாக “நீ விளையாடுவதை விட்டு சோஷியல் மீடியாவில் அதிக நேரம் செலவிடுகிறாய்” எனக் கூறினார். இதைக் கேட்டு கில்கிறிஸ்ட் மற்றும் வாஹ்ன் ஆகிய இருவருமே சிரித்து ரசித்தனர்.