வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Geetha Priya
Last Updated : ஞாயிறு, 13 ஜூலை 2014 (10:39 IST)

உலகக் கோப்பை : பிரேசிலுக்கு சோதனை மேல் சோதனை

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் மேலும் ஒரு பின்னடைவைச் சந்தித்துள்ளது.
 
பல மில்லியன் டாலர் செலவில் இந்தப் போட்டியை நடத்திய பிரேசில், தாம் ஆடிய கடைசி ஆட்டத்தில் 3-0 எனும் கோல் கணக்கில், நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது.
இந்த உலகக் கோப்பை போட்டியில், மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கான போட்டி பிரேசிலா நகரில் நடைபெற்றது.
 
ஜெர்மனி அணியிடம் 7-1 எனும் கணக்கில் அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்த பிரேசில், இழந்த தமது மானத்தை மீட்குமா, அல்லது அர்ஜெண்டினாவிடம் பெனால்டி முறையில் தோற்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெறாமல் போன நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பிடிக்குமா என்பதே, போட்டிக்கு முன்னர் ரசிகர்களிடையே பெரிதும் விவாதிக்கப்பட்டது.
 
பிரேசில் அணியின் தலைவர் தியாகோ சில்வா செய்த ஒரு தவறால், ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்தில், நெதர்லாந்துக்கு ஒரு பெனால்டி கிடைக்க அதை மூன்றாவது நிமிடத்தில், அணியின் தலைவர் ராபன் வான் பெர்சி கோலாக மாற்றினார்.
 

 
பின்னர் 16 ஆவது நிமிடத்தில் டேவிட் பிளைண்ட் ஒரு கோல் அடித்து இடைவேளை நேரத்தில் தமது அணியை 2-0 என்று முன்னிலைக்கு எடுத்துச் சென்றனர்.
பிரேசில் அணி கடுமையான போட்டியைக் கொடுத்தாலும், நெதர்லாந்து அணியின் தற்காப்பு ஆட்டத்தை தகர்த்து வெற்றி பெற முடியவில்லை.
ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நெதர்லாந்தில் வின்ஹால்டம் ஒரு கோல் அடிக்க, பிரேசிலின் கதை முடிந்தது.
 
இந்த உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை(13.7.14) அர்ஜெண்டினா-ஜெர்மனி அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.