வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 19 நவம்பர் 2019 (11:09 IST)

'ஸ்டெம்செல்' தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பெண்

தானத்தில் புதிய தானம், 'ஸ்டெம்செல் தானம்'. இன்றைய சூழலில் இதுவே மிக சிறந்த தானம் என்கிறார் கோவையை சேர்ந்த, இந்தியாவின் உறவின்முறை இல்லாத முதல் பெண் எலும்பு மஜ்ஜை நன்கொடையாளர் (Non-Related, First Female Bone Marrow Donor in  India) மாசிலாமணி.
கோவை புறநகர் பகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வரும் இந்த பெண் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். கடந்த  2012 ஆம் ஆண்டில், அவர் வாழ்ந்து வந்த பகுதியிலேயே வசித்து வந்த கவியரசன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  அவரும் 8 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார்.
 
இவர்களுக்கு 6 வயதில் மதிவதனி எனும் பெயர் கொண்ட மகளும், 2 வயதில் நீலவேந்தன் எனும் பெயர் கொண்ட மகனும் உள்ளனர்.  மதிவதனி பிறந்த ஆறு மாதத்தில் அவளுக்கு தலசீமியா என்கிற ஹீமோகுளோபின் குறைபாடு நோய் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால்  அன்று முதல் குறைந்தது மாதந்தோறும் ஒருமுறை ரத்தமாற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
 
சென்னை சேர்ந்த மருத்துவரான ரேவதிராஜ் அறிவுறுத்தல்படி, 'ஸ்டெம்செல்' சிகிச்சை எடுக்கும் முயற்சியை முன்னெடுத்தனர். இதற்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், மகள் மதிவதனிக்கு தாய், தந்தை, தம்பி என உறவினர்கள் எவருடைய குருத்தணு பொருந்தவில்லை.  அதனால் கொடையாளர்களிடம் இருந்து பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்காக பதிவு செய்ய சென்ற மாசிலாமணி மற்றும் அவரது  கணவர் கவியரசன் என இருவரும் தங்களையும் கொடையாளர்களாக பதிவு செய்து கொண்டனர்.
 
இது நடைபெற்று 3 ஆண்டுகளுக்கு பிறகு, மாசிலாமணியிடமிருந்து 3 வயது குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை நன்கொடை தேவைப்படுகிறது  என்கிற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தனது குழந்தைக்கு இத்தனை ஆண்டுகளாக நன்கொடை கிடைக்கவில்லையே என்று காத்திருந்த அவர், குடும்பம் மற்றும் சுற்றம் காட்டிய  எதிர்ப்புகளையும் மீறி கணவரின் ஒத்துழைப்போடு எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்துள்ளார்.
 
இந்தியாவில் முதல் முறையாக எலும்பு மஜ்ஜை நன்கொடை செய்த பெண் என்கிற பெருமை எனக்கு கிடைத்திருப்பதை காட்டிலும், தன்னால் ஒரு குழந்தையின் உயிரை காக்க முடிந்ததையே தான் பெருமையாக கருதுவதாக கூறுகிறார் மாசிலாமணி.
 
உலகத்தில் பல கோடி கணக்கானவர்கள், தன்னை போன்ற கொடையாளர்களுக்காக காத்திருப்பதாக கூறும் இவர், இதற்காகவே தான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் 'ஸ்டெம்செல்' தானம் குறித்தான முக்கியத்துவம் தொடர்பாக தொடர்ந்து பிரசாரம் செய்கிறேன் என்கிறார்.