வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Ashok
Last Modified: சனி, 17 அக்டோபர் 2015 (19:53 IST)

யாழ்ப்பாண காட்டுப்பகுதியில் மண்டையோடுகள் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் முள்ளி என்ற இடத்தில் காட்டுப்பாங்கான பகுதியில் மனித எலும்புகள், மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 


இந்தப்பகுதியில் களவாக மணல் ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கூறும் பொதுமக்களில் சிலர் அங்கே இந்த மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் தெரிவித்ததையடுத்து, அந்த இடத்திற்குச் சென்று அதனை உறுதி செய்ததுடன் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து, இன்று சனிக்கிழமை காலை அந்தப் பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் இடத்தைப் பரிசீலனை செய்ததுடன், மண்டையோடுகள், மனித எலும்புகளையும் பார்வையிட்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
 
யுத்தமோதல்கள் இடம்பெற்றதையடுத்து இந்தப் பகுதியில் இராணுவத்தினர் முகாமிட்டிருந்த காரணத்தினால்,பொதுமக்கள் அங்கு செல்வதில்லை என்றும், இராணுவத்தினர் அங்கிருந்து விலகிச் சென்றபின்னர், அந்தப் பகுதியில் களவாக மணல் ஏற்றப்பட்டு வந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
 
மண்டையோடுகள், மனித எலும்புகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள், கைப்பைகள், செருப்புகள் போன்றவற்றை வைத்துப்பார்க்கும்போது இங்கு இறந்தவர்கள் பெண்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.