1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:38 IST)

தனித்தீவில் தனிமை, தனியார் விமானங்களில் பயணம் - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை

ஒவ்வொரு பேரிடரும் யாரோ ஒருவருக்கு வருமானத்தை ஈட்டி தருகிறது. அப்படித்தான் கொரோனா வைரஸும். உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தில் இருக்க  தனியார் ஜெட் விமானங்களின் வருவாய் இந்த கொரோனா வைரஸ் தொற்று காரணமாகப் பல மடங்கு உயர்ந்துள்ளது.
என்ன காரணம்?
 
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தால் பெரும் பணக்காரர்கள் மக்களுடன் மக்களாக விமானங்களில் பயணிக்க அஞ்சுகிறார்கள். தங்கள்  பயணங்களுக்கென தனி விமானங்களை ஏற்பாடு செய்ய சொல்லி விமான நிறுவனங்களை (Charter Jets) அணுகுவது அதிகரித்திருக்கிறது. இப்படியான  பயணங்களின் கட்டணம் மிக அதிகம்.
 
ஆனால் அதே நேரம், ஆள்பற்றாகுறை, கொரோனா அச்சம் காரணமாகத் தேவைக்கேற்ற விமானங்களை ஏற்பாடு செய்ய முடியவில்லை. பிபிசியிடம் பேசிய  ஆஸ்திரேலியாவை தலைமையகமாகக் கொண்ட டாரின் வோல்ஸ் பிரைவேட் பிசினஸ் ஜெட் நிறுவனம், "பலர் எங்களை அணுகுகிறார்கள். ஆனால்,  ஆள்பற்றாகுறை காரணமாக தேவையை எங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை," என்கிறது.
 
சிங்கப்பூரை நிறுவனமான மைஜெட் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி லோகன் ரவிசங்கர், "80 - 90 சதவீதம் அளவில் எங்களது சேவை அதிகரித்துள்ளது,"  என்கிறார்.
 
எவ்வளவு கட்டணம்?
 
பத்து பேர் அமரக் கூடிய இதுமாதிரி விமானங்களை வாடகைக்கு எடுக்க ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 420,000 ரூபாய் ஆகும். நான்கு பேர் அமரக்கூடிய சிறிய  ரக விமானங்கள் என்றால் ஒரு மணி நேரத்திற்குக் குறைந்தது 168000 ரூபாய் ஆகும்.
இதற்கு முன்பு
 
சார்ஸ் அச்சம் பரவிய 2003 காலகட்டங்களில் இது போன்ற தனியார் விமானச் சேவையை அணுகுவோரின் எண்ணிக்கை கணிசமாக இருந்திருக்கிறது.
 
சரி... கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச அளவில் நடக்கும் செய்திகளைப் பார்ப்போம்.
 
சர்வதேச அளவில் நடப்பவை என்ன?
 
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதித்தாக 2051 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 94 சதவீதம் பேர் ஹூபே மாகாணத்தை  சேர்ந்தவர்கள். சீனாவில் மட்டும் இதுவரை 70,600 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 1771 பேர் பலியாகி உள்ளனர்.
 
கிறிஸ்துமஸ் தீவு
 
சீனா சென்று திரும்பிய ஆஸ்திரேலியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தில் ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து ஏறத்தாழ 2700 கி.மீ  தொலைவில் இந்தோனீசியாவுக்கு அருகில் இருக்கும் கிறிஸ்துமஸ் தீவில் இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தியது ஆஸ்திரேலியா. இவர்கள் அனைவரும்  நாடு திரும்பிவிட்டனர். இவர்களில் யாரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை.
 
ஜப்பான் புதிய அரசர் நறுஹிட்டோவின் பிறந்தநாள் பொது நிகழ்ச்சியை கொரோனா அச்சத்தால் ரத்து செய்துவிட்டது ஜப்பான். கம்போடியா கடல் எல்லையில்  நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்து வெளியேறிய அமெரிக்ககர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது மலேசியாவில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

அந்த  கப்பலிலிருந்து வெளியேறியவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சென்று இருப்பதால், அவர்களில் பலர் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அச்சமும், சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 300 அமெரிக்கர்களை அழைத்துக் கொண்டு ஜப்பானிலிருந்து புறப்பட்ட இரண்டு விமானங்கள் அமெரிக்கா சென்று சேர்ந்தது.