1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2020 (16:56 IST)

"கோரக்பூர் குழந்தைகள் இறப்பை அம்பலப்படுத்தியதால் சிறையில் சித்ரவதை" - கஃபீல் கான் வெளியிடும் அதிர்ச்சி தகவல்கள்

கடந்த 8 மாதங்களாக சிறையில் இருந்த டாக்டர் கஃபீல் கான் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட பின்னர், தான் கைதானது CAA எதிர்ப்பு போராட்டங்களின் போதான பேச்சுக்காக அல்ல, கோரக்பூரின் பி.ஆர்.டி மருத்துவ கல்லூரியில் 60க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த சம்பவத்தை அம்பலப்படுத்தியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டதாக கூறினார்

சிறையில் என்னை வேண்டுமென்றே சித்ரவதை செய்தனர். பல நாட்கள் பசியுடன் இருந்தேன் என்று பிபிசியுடனான உரையாடலில் கஃபீல் கான் கூறினார்.

"மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறந்த பிறகு நான் மூன்று முறை சிறையில் அடைக்கப்பட்டேன். ஆனால் இந்த முறை சிறை செல்வது மிகவும் பயமாக இருந்தது" என்று கபீல் கான் கூறினார்.

"மதுரா சிறையில், பல நாட்கள் எனக்கு உணவு வழங்கப்படவில்லை. உணவு வழங்கப்பட்டாலும், ரொட்டிகள் தூக்கி எறியப்பட்டன மேலும், சிறைக்குள் உடல் மற்றும் மன ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டதாக டாக்டர் கஃபீல், கூறினார்

"50 கைதிகளை வைக்கும் திறன் கொண்ட பேரக்கில் 150 கைதிகளுடன் வைக்கப்பட்டேன். நீதிமன்றத்தில் இருந்து ஜாமீன் பெற்றபோதும் மூன்று நாட்களுக்கு நான் விடுவிக்கப்படவில்லை, பின்னர் எனக்கு எதிராக தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு தொடர்ந்தனர்"

சிறை அதிகாரிகளின் அணுகுமுறை இவ்வாறாக இருந்தபோதிலும், சிறை கைதிகள் நன்றாக நடத்தினர் என்று கபீல் கான் கூறுகிறார்.

"பிஆர்டி மருத்துவக் கல்லூரி சம்பவத்தால் எல்லோரும் என்னை அறிந்தார்கள். காலையில் ராதே ராதே எனப்படும் கூட்டம் இருக்கும். எல்லோரும் ராமாயணம் மற்றும் மகாபாரத சீரியல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

லாக்டவுனுக்கு பிறகு, குடும்ப உறுப்பினர்கள் கூட சந்திக்க வர முடியாது. என் வாழ்க்கையே துண்டிக்கப்பட்டது. " என்று அவர் கூறினார்.

எப்படி உலகம் மாறியது?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவ கல்லூரியில், ஆக்ஸிஜன் குறைபாடு காரணமாக அறுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்த பின்னர் வெளிச்சத்திற்கு வந்த கஃபீல் கான்,

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் அவதூறாக தூண்டிவிடும் வகையில் பேசியதாக சிறப்பு பாதுகாப்பு படையால் கடந்த ஆண்டு டிசம்பரில் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது, ஆனால் இந்த நேரத்தில் என்எஸ்ஏ எனப்படும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் ஒரு பிரிவை மாநில அரசு அவருக்கு எதிராக பயன்படுத்தியது.

கஃபீல் கானுக்கு எதிராக மாநில அரசு இதுவரை இரண்டு முறை தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கையை நீட்டித்தது. கடந்த செவ்வாய்கிழமை, அலகாபாத் உயர்நீதிமன்றம் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது. மேலும் அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டது மற்றும் அவருக்கு எதிராக என்எஸ்ஏ பயன்படுத்தப்பட்டது சட்டவிரோதம் என்றது.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஆட்சேப்கர கருத்துகள் இடம்பெற்றதாக தோன்றவில்லை என்றும், இவ்வளவு அதிக தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக, உயர்நீதிமன்றமே தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருப்பதாக டாக்டர் கபீல் கூறுகிறார்,

ஆனால் சிறைக்கு அனுப்பப்படுவதற்கான உண்மையான காரணம் பிஆர்டி மருத்துவக் கல்லூரி சம்பவம் தான் என்கிறார்.

"பி.ஆர்.டி மருத்துவக் கல்லூரியில் குழந்தைகள் இறப்பதற்கு ஒரு நாள் முன்பு ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல்வர் யோகி கோரக்பூருக்கு வந்தார். அங்குள்ள குழந்தைகளின் ஐ.சி.யூ வார்டைப் பார்த்து அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து என் முதுகில் தட்டிக்கொடுத்தார். இதை உருவாக்க நான் மிகவும் கடினமாக உழைத்தேன். இந்த வழக்கில் அவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம். ஒருவேளை அது வேறு ஏதேனும் அரசியல் கட்சியுடன் தொடர்புடையது என்ற தவறான எண்ணம் என்னைப் பற்றி தவறாக பரப்பப்பட்டது. "என்கிறார்.

"ஜனவரி 23 அன்று கோரக்பூரின் பிஆர்டி மருத்துவ கல்லூரி வழக்கில் இரண்டாவது விசாரணையில் நான் குற்றம் இழைக்கவில்லை என்று தீர்ப்பு கிடைத்தது. இதற்குப் பிறகு, அரசாங்கம் வருத்தமடைந்து, நான் ஒரு பயங்கரவாதி போல நடத்தப்பட்டேன்.

"குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவது குற்றமா? கொரோனா நெருக்கடியின் போது கூட நாட்டிற்கும் சமூகத்திற்கும் நான் அச்சுறுத்தலாக மாறுவேன் என்று அரசாங்கம் ஏன் உணர்ந்தது?. இறுதியில், உயர் நீதிமன்றம் அவர்களின் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டவிரோதமானது" என்று கூறியுள்ளதாக டாக்டர் கஃபீல் கான் கூறியுள்ளார்.

ஹேபியஸ் கார்பஸ் என்ற ஆட்கொணர்வு மனுவின் கீழ் விடுவிக்கப்பட வேண்டும் என்று கபீல் கானின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததோடு, என்எஸ்ஏவுக்கு எதிராக சவால் விடுத்திருந்தனர். ஆனால் இந்த விவகாரத்தை விசாரிக்க அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்த வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு வந்தபோது, தொழில்நுட்ப காரணங்களால், இந்த வழக்கை விசாரிக்க கஃபீல் கான் பன்னிரண்டு முறை வாய்தாவுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.