செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: சனி, 8 ஆகஸ்ட் 2020 (10:46 IST)

சதிக்கோட்பாடு பரப்பிய 2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கியது ஃபேஸ்புக்

சதிக்கோட்பாடு ஒன்றை பரப்பி அது பற்றி விவாதித்து வந்த குழுவொன்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.

டீப் ஸ்டேட், வணிக மற்றும் ஊடக சக்திகள் தங்களுக்குள் ஒரு ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக செயல்படுகின்றன என்ற ஒரு சதிக் கோட்பாாட்டை நம்பும், அதனை பரப்பும், விவாதிக்கும் ஒரு குழுவுக்குப் பெயர் கியூஅனான் (QAnon)  என்பதாகும்.
 
டீப் ஸ்டேட் என்றால் என்ன?
 
டீப் ஸ்டேட் என்றால் வெளித் தோற்றத்தில் தெரியும் அரசுக்குள் செயல்படும் அதிகாரம் மிக்க ஒரு சிறு குழுவைக் குறிக்கும். அதிகாரம் மிக்க ஆட்களைக் கொண்ட  சிறு வலைப்பின்னலாக செயல்படும் இந்தக் குழு அரசையே ஆட்டிப் படைக்கும் ஒரு அரசாக செயல்படும் என்ற ஒரு கோட்பாடு உள்ளது. இப்படி ஒரு குழு  இருப்பதாக நம்புகிறவர்கள் அதைக் குறிப்பிட ஆங்கிலத்தில் பயன்படுத்தும் சொல்லே 'டீப் ஸ்டேட்'.
 
'ஆழ் அரசு' என்று இதனை நேரடியாக மொழி பெயர்த்து ஒரு தமிழ்ச் சொல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை இன்னும் பொருத்தமான சொல் ஒன்று வரலாம்.  சரி மீண்டும் செய்திக்கு வருவோம்.
 
2 லட்சம் உறுப்பினர்கள்
 
கியூஅனான் சதிக் கோட்பாட்டைப் பேசும் குழுவினர் ஃபேஸ்புக், டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் செயல்பட்டு வருகின்றனர்.
 
தற்போது ஃபேஸ்புக்கால் தடைசெய்யப்பட்டுள்ள Q/Qanon என்று ஆங்கிலத்தில் பெயரிடப்பட்டிருந்த குழுவில் சுமார் இரண்டு லட்சம் பேர் உறுப்பினர்களாக  இருந்தனர்.
 
"எங்கள் சமுதாயக் கொள்கைகளை மீறும் உள்ளடக்கத்தை தொடர்ந்து பதிவிட்டதற்காக" இந்த குழு அகற்றப்பட்டதாக ஃபேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ஒருவர்  தெரிவித்தார்.
 
முன்னதாக, கடந்த மாதம் கியூஅனானுடன் தொடர்புடைய உள்ளடக்கங்களை ட்விட்டர், டிக்டாக் ஆகிய நிறுவனங்கள் தங்களது தளத்திலிருந்து நீக்கின.
 
இந்த சதி கோட்பாட்டு குழுவுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஆயிரக்கணக்கான ட்விட்டர் கணக்குகள் மட்டுமின்றி அதன் இணைய முகவரிகளை தடை செய்வதாக ட்விட்டர் அறிவித்தது. அதேபோன்று, கியூஅனான் சம்பந்தப்பட்ட ஹேஷ்டேகுகளை கொண்டு டிக்டாக்கில் காணொளி தேடுதல் மேற்கொள்வதை அந்த நிறுவனம் கட்டுப்படுத்தியது.