1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By papiksha joseph
Last Modified: வெள்ளி, 11 நவம்பர் 2022 (12:17 IST)

காலையில் பல் விளக்கிவிட்டுதான் டீ, காபி குடிக்கவேண்டுமா?

நீங்கள் காலை எழுந்தவுடன் பல் விலக்கிவிட்டு டீ, காபி குடிப்பவராக இருக்கலாம். அல்லது டீ, காபி குடித்துவிட்டு பல் விலக்கும் நபராகவும் இருக்கலாம்.
 
நீங்கள் எப்படி இருந்தாலும், இரண்டில் எந்தப் பழக்கம் சிறந்தது என்று எப்போதாவது யோசித்தது உண்டா? அதாவது, பல் விளக்கிவிட்டு, சாப்பிடுவது நல்ல பழக்கமா, சாப்பிட்டுவிட்டு பல் துலக்குவது நல்ல பழக்கமா என்ற கேள்வி எப்போதாவது உங்களுக்கு வந்திருக்கிறதா?
 
ஆம் எனில், இன்னொரு கேள்வியும் உங்களுக்கு வந்திருக்கலாம் டீ, காபி அல்லது நாம் உட்கொள்ளும் பிற உணவுப் பொருட்கள் நம் பற்களில்  கறைகளை ஏற்படுத்தாமல் தவிர்க்க சிறந்த வழி என்ன? காபி, டீ ஆகியவை பிரபல பானங்கள் ஆகும். இவை வாயில் நுழையும் போது தவிர்க்க முடியாமல் அவை பற்களுடன் தொடர்பு கொள்கின்றன.
 
காபி ஒரு அமில திரவம் - அதன் 1 முதல் 14 வரையிலான pH அளவுகோலில் காபியிடம் இடம் 5 ஆக உள்ளது. மேலும் இதில் டானின்கள் உள்ளன, இது பற்களில் கறை ஏற்படுவதை ஊக்குவிக்கும்.
 
ஆனால் இந்த கறைகள் ஏன் உருவாகின்றன? இந்தக் கேள்விக்கு விடை தேடும் முன்பு, கறைகளில் இரண்டு வகைகள் உள்ளன என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்.
 
1. உள்ளார்ந்த கரைகள்,
 
2. வெளிப் புறக் கறைகள் என்பவையே அந்த இரு வகைகள்.
 
உள்ளார்ந்த கரை என்பது பல் எனாமலுக்குக் கீழே உருவாகக் கூடியவை.
 
இந்த வகைக் கறைகளில் சில பிறவியிலேயே இருக்க கூடியவை. சில அதிக ஃபுளோரைடு கலந்த நீரினால் உருவாகும். பல்லில் அடிபட்டது, சில வகை ஆன்டிபாயாடிக் மருந்துகள் போன்றவற்றாலும் உள்ளார்ந்த கரைகள் உருவாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 
வெளிப்புறக் கரைகள் மிகவும் பொதுவானவை, அவை பல்லின் மேற்பரப்பில் இருக்கும். காபி, தேனீர், சிவப்பு ஒயின், குளிர்பானங்கள், பழச்சாறுகள், வெற்றிலை பாக்கு, பான்பராக் போன்றவற்றில் உள்ள நிறமிகளால் இத்தகைய வெளிப்புறக் கறைகள் ஏற்படுகின்றன.
 
"காபி அல்லது ஒயின் போன்ற பானங்கள் பழுப்பு, சிவப்பு ஆகிய நிறங்களைக் கொண்டிருக்கின்றன, அதனால் அவை துணிகளை கறைபடுத்துவது போல் பல்லைக் கறைப்படுத்துகின்றன " என்று புளோரிடா அசோசியேஷன் ஆஃப் டென்டல் ஹைஜீனிஸ்ட்ஸின் (அமெரிக்கா) பல் சுகாதார நிபுணர் எமிலி ஆண்டர்சன் பிபிசியிடம் தெரிவித்தார்.
 
எப்படியிருந்தாலும், பற்களில் தங்கள் அடையாளத்தை விட்டுச்செல்லும் உணவுகளில், காபி மோசமான ஒன்று அல்ல. "இது சிவப்பு ஒயின் அல்லது சில வகையான தேநீர் போன்ற கறைகளை உருவாக்காது," என்கிறார் புளோரிடா பல்கலைக்கழகத்தின் பல் மருத்துவத்துவத் துறை இணைப் பேராசிரியர் ஆண்ட்ரே ரெய்ஸ்.
 
மஞ்சள் கரையா...
பற்பசை விளம்பரங்களில் நாம் அதிகம் கேள்விப்பட்ட ஒரு வாசகம் மஞ்சள் கரை. ஆங்கிலத்தில் இதை பிளாக் (plaque) என்கிறார்கள்.
 
பல்லின் அடிப்பரப்பில் அழுக்குபோல ஒட்டிக்கொண்டிருக்கும் இது உண்மையில் பாக்டீரியாக்களின் கூட்டம்.
 
உங்கள் வாய்க்குள் வரும் சர்க்கரையை உண்ணவே இந்த பாக்டீரியாக் கூட்டம் உருவாகிறது. இப்படி கூடும் பாக்டீரியாக்கள் அமிலங்களை உமிழ்கின்றன. இந்த அமிலம் உங்கள் பற்களைத் தாக்கி சேதப்படுத்தும். உண்மையில் வாய்க்குள் வரும் சர்க்கரையே இந்தப் பாதிப்புக்கான காரணம்" என்கிறார் ஆண்டர்சன்.
 
இந்த பிளாக்குகள் நிறத்தை உறிஞ்சிக்கொள்ளக்கூடியவை. காபி போன்ற பானங்கள் மூலம், "உங்கள் பற்களுக்கு இடையில் மற்றும் ஈறுகளில் கறையை நீங்கள் காண்பீர்கள், ஏனென்றால் அங்குதான் பிளாக் உருவாகிறது," என்கிறார் ஆண்டர்சன்.
 
டார்ட்டர்?
பல் தொடர்பான விளம்பரங்களில் அடிபடும் இன்னொரு சொல் டார்ட்டர்.
 
உங்கள் பல்லில் பிளாக்குகள் நீண்ட காலம் நீடித்தால், அது தடித்து டார்ட்டராக உருவாகும்.
 
பெரும்பாலான கறைகள் பல் மருத்துவரால் சுத்தம் செய்ய முடிகிறவையே.
 
ஆளுக்கு ஆள் காலம் மாறும் என்றாலும், சராசரியாக ஆண்டுக்கு இரண்டு முறை பல் சுத்தம் செய்துகொண்டு, பிளாக், டார்ட்டர் ஆகியவற்றை அகற்றிக் கொள்ளவேண்டும். இதனால் கறை மறையும்.
 
இது போதாது என்றால் மருத்துவர் கார்பமைடு பெராக்சைடு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு போன்றவற்றைப் பயன்படுத்தி வெண்மையாக்குவார். (மருத்துவர் உதவியின்றி அவ்வாறு செய்வது நிலைமையை மோசமாக்கும்).
 
பற்களில் பிளேக் ஏன் உருவாகிறது என்பதற்கான பதில் பொதுவாக ஒன்றுதான்.
 
"பெரும்பாலான மக்களுக்கு, வெளிப்புறக் கறைகள் ஏற்படுகின்றன, ஏனென்றால் அவர்கள் பற்களை, முறையாகத் துலக்குவதில்லை. சரியாக பற்களுக்கு இடையே உள்ள கறைகளை ஃபிளாசிங் செய்து நீக்குவதில்லை," என்று ஆண்டர்சன் விளக்குகிறார்.
 
இரண்டு பற்களுக்கு இடையில் உள்ள இடைவெளிக்கு இணையாக மேலும் கீழுமாக பிரஷ்ஷை இயக்கி பல்லை துலக்கவேண்டும்.
 
இப்படி வட்டம் முழுவதிலும் மூன்று புறங்களிலும் துலக்கவேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கவேண்டும். குறைந்தபட்சம் ஒரு முறையாவது ஃப்ளாஸ் செய்யவேண்டும்.
 
அழுக்கு, பாக்டீரியா போன்றவற்றை அகற்ற பிரஷ்ஷால் கடுமையாக அழுத்தவேண்டும் என்ற அவசியமில்லை.
 
 மாறாக, அவ்வாறு செய்வது ஈறுகளை சேதப்படுத்தும். அமெரிக்க பல் மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியபடி, ஆண்டர்சன் ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
 
ஆனால் பல லத்தீன் அமெரிக்க நாடுகளில், பல் சங்கங்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை பல் துலக்க பரிந்துரைக்கின்றன." என்று பிரேசில் நாட்டவரான ரெய்ஸ் கூறுகிறார்.
 
மதிய உணவு மற்றும் இரவு உணவு சாப்பிட்ட பிறகு பல் துலக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. ஆனால் காலை உணவுக்கு முன்பாக பல் துலக்கவேண்டுமா அல்லது பிறகா என்ற கேள்வியைப் பொறுத்த வரை வெவ்வேறு பழக்கவழக்கங்கள் உள்ளன.
 
 சிலர் அதை முன்பு செய்கிறார்கள் மற்றவர்கள் பிறகு செய்கிறார்கள். காபி குடிப்பதற்கு முன் அதைச் செய்தால் அதனால் நன்மைகள் உள்ளன.  இரவில் வாயில் உருவாகும் பிளாக் அகற்றப்படுகிறது, எனவே, குடிக்கும் பானத்தின் நிறம் அவ்வளவு எளிதில் ஒட்டாது. இருப்பினும், ஆண்டர்சன் மற்றும் ரெய்ஸ் இருவரும் காலை உணவுக்குப் பிறகு அதைச் செய்வது சிறந்தது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
 
"இப்படி செய்தால் நீங்கள் நீண்ட காலத்திற்கு உங்கள் வாயில் பிளாக் உருவாக்க மாட்டீர்கள்," என்கிறார் ரெய்ஸ்.
 
"அந்த பானங்களை அருந்துவதற்கு முன் பல் துலக்குவது உதவாது , ஏனென்றால் பிரச்சனை காலப்போக்கில் ஏற்படுகிறது . நீங்கள் காபி குடிப்பது ஒரு முறை மட்டும் அல்ல. காலப்போக்கில் கறை மற்றும் பிளாக் உருவாகிறது," என்கிறார் ஆண்டர்சன்.
 
வாய்வழி சுகாதாரத்திற்கான ஆரோக்கியமான விஷயம் சாப்பிட்ட உடனேயே பல் துலக்குவது அல்ல, ஆனால் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டும்.
 
"நம் பற்கள் ஒவ்வொரு நாளும் கனிம நீக்கம் மற்றும் மீளுருவாக்கம் செய்கின்றன. அமிலங்கள் வாயில் நுழைந்து பாக்டீரியாக்கள் சர்க்கரையுடன் அமிலத்தை உற்பத்தி செய்யும் போது, ​​பல் எனாமல் அமிலத்தால் தாக்கப்படுகிறது," என்று நிபுணர் விளக்குகிறார்.
 
"அந்த செயல்முறை நடக்கும் போது, ​​பல் எனாமல் பாதிக்கப்படும். எனவே அதற்கு மேல் துலக்காமல் இருப்பது நல்லது," என்று அவர் கூறுகிறார்.
 
எனாமலுடன் அமிலங்களின் தொடர்பைக் குறைக்க - இதனால் கறை உருவாகும் வாய்ப்பைக் குறைக்க - பல் சுகாதார நிபுணரின் ஆலோசனையானது சாப்பிட்டவுடன் வாய் கொப்புளித்து தண்ணீர் குடிக்கவேண்டும் என்பதே".