ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (23:59 IST)

கொரோனா தடுப்பூசி: எவ்வளவு தூரத்தில் உலக தயாரிப்புகள் உள்ளன?

பிரிட்டனில் இரண்டாவது கொரோனா தடுப்பு மருந்துக்கு (ஆக்ஸ்ஃபோர்டு - ஆஸ்ட்ராசெனிகா இணைந்து உருவாக்கியது) அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
இந்தியாவிலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர அனுமதி தரப்பட்டுள்ளது.
 
ஆனால் மற்ற தடுப்பூசிகளுடன் இதை எவ்வாறு ஒப்பிடுவது?
 
ஏன் தடுப்பூசி தேவை?
 
இன்னும் பல மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நிலையில் இருக்கிறார்கள். தற்போது விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் மட்டுமே பல மக்கள் இறப்பதைத் தடுக்க உதவும்.
 
நம் உடலுக்கு கொரோன வைரஸை எதிர்த்துப் போராட, தடுப்பு மருந்து கற்றுக் கொடுக்கும். அது தான் நம் உடலில் கொரோனா தொற்று பரவாமல் பாதுகாக்கும் அல்லது குறைந்தபட்சமாக கொரோனாவை அதிக ஆபத்தற்ற வைரஸாக்கும்.
 
தடுப்பூசியுடன், நல்ல சிகிச்சை தான் கொரோனா வைரஸ் பிரச்சனையில் இருந்து வெளி வருவதற்கான ஒரே வழி.
 
ஆக்ஸ்ஃபோர்டு -ஆஸ்ட்ராசெனிகா
 
ஆக்ஸ்ஃபோர்டு தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து, சோதனையில் 70 சதவீத பேரின் உடலில் கொரோனா வைரஸை தடுப்பதால், அந்த மருந்துக்கு டிசம்பர் 30 அன்றே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.
 
வயதானவர்களின் உடலில் இந்த தடுப்பு மருந்து, வலுவான நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்துவதாக, இந்த சோதனையின் தரவுகள் காட்டுகின்றன.
 
இந்த மருந்தின் டோஸேஜ்களைச் சரி செய்தால் 90 சதவீதம் வரை பாதுகாப்பளிக்கும் எனத் தரவுகள் கூறுகின்றன.
 
பிரிட்டன் 100 மில்லியன் டோஸ் மருந்துக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது.
 
இந்த மருந்து இரண்டு டோஸ்களாக வழங்கப்படுகின்றன.
 
20,000 பேரிடம் இந்த மருந்துக்கான மருத்துவ பரிசோதனைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.
 
விநியோகிக்க மிகவும் எளிதான தடுப்பு மருந்துகளில், இந்த ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பு மருந்தும் ஒன்று எனக் குறிப்பிடலாம். காரணம் இந்த தடுப்பு மருந்தை மிகவும் குறைந்த வெப்பநிலையில் வைக்க வேண்டும் என்கிற அவசியமில்லை.
 
இந்த கொரோனா தடுப்பு மருந்து, சிம்பன்ஸிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட, பலவீனப்படுத்தப்பட்ட சாதாரணமான சளி வைரஸில் இருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வைரஸும் மனிதர்களின் உடலில் பரவிவிடக் கூடாது என செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கிறது.
 
ஃபைசர் பயோஎன் டெக் தடுப்பூசி
 
கடந்த நவம்பர் 2020-ல் பைசர் பயோஎன் டெக் நிறுவனம் தன் தடுப்பூசிக்கான சோதனை முடிவுகளை முதலில் வெளியிட்டது.
 
அந்தத் தடுப்பூசியின் செயல்திறன் 95 சதவீதம் எனக் கூறப்பட்டிருந்தது.
 
பிரிட்டன் இன்னும் 40 மில்லியன் டோஸ் மருந்துகள் பாக்கி பெற வேண்டி இருக்கிறது.
 
இந்த தடுப்பூசி, மூன்று வார கால இடைவெளியில், இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படுகிறது.
 
சுமாராக 43,000 பேர் இந்த கொரோனா தடுப்பூசி சோதனையில் பங்கெடுத்தார்கள். அவர்களில் யாருக்கும் எந்த வித பாதுகாப்புப் பிரச்சனைகளும் ஏற்படவில்லை.
 
இந்த கொரோனா தடுப்பு மருந்து -70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். ஜிபிஎஸ் கொண்ட சிறப்புப் பெட்டியில், உலர் பனிக்கட்டிகளுடன் இந்த தடுப்பூசி பாதுகாப்பாக வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
 
கடந்த டிசம்பர் 2-ம் தேதி, உலகிலேயே முதன்முறையாக ஃபைசர் பயோஎன் டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை, பரவலான பயன்பாட்டுக்கு அனுமதித்தது பிரிட்டன்.