1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 31 மே 2021 (12:29 IST)

பிரதமர் இல்ல கட்டுமானம் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்படலாம் - ஊடக செய்திகள்

(இன்று 31 மே 2021, திங்கட்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

15 ஏக்கர் நிலபரப்பில் கட்டப்பட உள்ள பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமர் வீட்டு கட்டுமானப் பணிகள், வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த திட்டத்தை 2021 டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்வதாக, கடந்த ஜனவரி மாதம் மத்திய பொதுப் பணித் துறை அலுவலகம் கூறியது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக பணிகள் தொடங்கப்பட தாமதமாயின.

இந்த பிரம்மாண்ட பிரதமர் அலுவலகம் மற்றும் இல்லத்தில் 1,000 அரசு ஊழியர்கள் வேலை பார்க்கலாம். 112 வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கான இட வசதிகள் உண்டு.

பிரதமருக்கு பாதுகாப்பு வழங்கும் சிறப்பு பாதுகாப்புப் படை குழுவுக்கான கட்டடமும், பிரதமர் இல்லத்துக்கு அருகில் 2.5 ஏக்கர் நிலபரப்பில் வர இருக்கிறது.

இந்த வளாகம், பிரதமரின் அலுவலகம் மற்றும் பிரதமரின் இல்லம் என ஒருங்கே கொண்டதாக இருக்கும். பிரதமரின் இல்லத்துக்கு செலவழிக்க இருக்கும் தொகை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு 13,400 கோடி ரூபாய் செலவழிக்க இருப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த தொகையில் நாடாளுமன்றம் மற்றும் ராஜ்பத் மறுசீரமைப்புச் செலவுகள் அடங்காது.

"எனக்கு பரோல் வேண்டாம், சிறையே பாதுகாப்பாக உணர்கிறேன்" என கூறிய மீரட் கைதி

ஆசிஷ் குமார் என்பவர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் சிறையில் ஆறு ஆண்டு கால சிறை தண்டனையில் இருக்கிறார். அவருக்கு சிறப்பு பரோல் வழங்கப்பட்டது. ஆனால் அதை ஆசிஷ் ஏற்கவில்லை என தி இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், தான் வெளியே செல்வதை விட சிறையிலேயே பாதுகாப்பாக உணர்வதாக கூறியுள்ளார் ஆசிஷ்.

மாநில அரசின் வழிகாட்டுதல் பேரில், மீரட் சிறையில் இருக்கும் 43 குற்றவாளிகளுக்கு எட்டு வார கால சிறப்பு பரோல் வழங்கப்பட்டது. அதில் ஆசிஷ் தவிர மற்ற 42 பேரும் பரோலை ஏற்றுக் கொண்டனர்.

சிறையில் ஜன நெருக்கடியைக் குறைக்கும் நோக்கத்தோடு மீரட் சிறையில் இருக்கும் 326 விசாரணைக் கைதிகளுக்கும் சிறை நிர்வாகம் பரோல் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆசிஷைப் போலவே, உத்தரப் பிரதேசத்தில் 21 சிறைக் கைதிகள், தங்களுக்கு பரோல் வேண்டாம் என மறுத்துள்ளதாக பிடிஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

பரோல் பெறுபவர்கள், எத்தனை நாட்கள் பரோல் பெறுகிறார்களோ, அத்தனை நாட்களையும் தண்டனை காலத்துக்குப் பிறகு சிறையில் கழித்துவிட்டு தான் வெளியே வர முடியும் என அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதன் மூலம் தனித்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சியா? நமச்சிவாயம் எம்.எல்.ஏ பதில்

எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதன் மூலம் புதுச்சேரியில் தனித்து ஆட்சி அமைக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா? என்பதற்கு நமச்சிவாயம் பதில் அளித்திருகப்பதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகி இருக்கிறது.

புதுச்சேரியில் அமைச்சரவை விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் கட்சியின் மேலிட அழைப்பை ஏற்று பா.ஜ.க. தலைவர்கள் நமச்சிவாயம், ஏம்பலம் செல்வம் ஆகியோர் டெல்லி சென்றனர்.

அங்கு பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து புதுச்சேரி அரசியல் நிலவரம், அமைச்சரவையில் பங்குபெறுவது குறித்து பேசினர்.

அதன்பின் நேற்று நமச்சிவாயம் புதுச்சேரி திரும்பிய போது, பா.ஜ.க. தனது எம்.எல்.ஏ.க்கள் பலத்தை உயர்த்தியதை பயன்படுத்தி புதுவையில் தனித்து ஆட்சி அமைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகிறதே? என நிருபர்கள் கேட்டனர்.

அந்த குற்றச்சாட்டு உண்மை அல்ல. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடக்கும். மிகச் சிறப்பான முறையில் தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்திருப்பதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.