1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (23:56 IST)

சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இனி இந்தியாவில் பயன்படுத்த முடியாதா?

முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
 
தினத்தந்தி: "சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இனி இந்தியாவில் பயன்படுத்த முடியாதா?"
 
சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க பாதுகாப்பு நடைமுறை விதிகளை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
 
சீனாவின் பெரியதொரு ஏற்றுமதி - இறக்குமதியாளராக இந்தியா உள்ளது. ஆனால், இருநாடுகளுக்கு இடையே எல்லை பகுதியில் நிலவி வரும் மோதல் போக்கின் காரணமாக சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது.
 
டிக்-டாக் செயலி உள்ளிட்ட சீனாவின் 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு, இந்திய அரசு அதிரடியாக தடை விதித்தது. மேலும், ரயில்வே, மின்சாரம், சாலைப் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஒப்பந்த பணிகளை மேற்கொண்டிருந்த சீன நிறுவனங்களை மத்திய அரசு உடனடியாக வெளியேற்றியது.
 
இந்த நிலையில், இந்தியாவில் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள், தாங்கள் பயன்படுத்தும் பொருட்கள், நுட்பங்கள் உட்பட, அனைத்திலும், அது எந்த நாட்டின் தயாரிப்பு என்பதையும், அதன் பின்னணி விவரங்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பாதுகாப்பு விதிகளை உருவாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதன் மூலம் சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை இந்தியாவில் பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்து தமிழ் திசை: ஹாத்ரஸ் வழக்கு: "இளம்பெண்ணை குடும்பத்தினரே கௌரவ கொலை செய்துவிட்டனர்"
 
உத்தரப் பிரதேச மாநிலம், ஹாத்ரஸில் கூட்டு பாலியல் வல்லுறவு செய்து இளம்பெண் பலியான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் சிறையில் இருந்து கடிதத்தில், இளம்பெண் தனது குடும்பத்தாரால் கௌவரவக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
 
"கடந்த செப்டம்பர் 14இல் உ.பியின் ஹாத்ரஸில் சண்ட்பா கிராமத்தை 19 வயது பெண் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி, தாக்கப்பட்டதில் உயிருக்கு போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த மாத இறுதியில் உயிரிழந்தார்.
 
ஹாத்ரஸ் வழக்கு
இந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த ’உயர் சமூகத்து’ இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
உ.பியின் சிறப்பு படையினரால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு தற்போது சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அப்பெண்ணின் குடும்பத்தார் மீது புதிய புகார் கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றஞ்சாட்டப்பட்ட எழுதிய கடிதத்தில், "எங்கள் நால்வர் மீதும் பாலியல் வல்லுறவு மற்றும் தாக்குதல் வழக்கு தவறாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பலியான இப்பெண்ணுடன் எனக்கு இருந்த நட்பின் காரணமாக கைப்பேசியிலும் சில சமயம் பேச்சுவார்த்தை நடந்தது உண்டு. என்னுடன் இருந்த நட்பை கண்டித்து அப்பெண்ணை அவரது தாயும், சகோதரரும் அவரை அடித்து படுகாயப்படுத்தியதாக கிராமத்தினர் கூறினர்.
 
இதனால், அந்த பெண் பிறகு பரிதாபமாகப் பலியாகிவிட்டார். ஆனால், நான் அந்த பெண்ணுடன் எப்போதும் தவறாக நடந்து கொண்டதில்லை. இந்த வழக்கில் என்னுடன் சேர்த்து மற்ற மூவரையும் அந்த பெண்ணின் வீட்டார் பொய் புகார் செய்து சிறையில் தள்ளி விட்டனர். நாங்கள் அனைவரும் நிரபராதிகள்" இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
 
 
முகேஷ் அம்பானி
 
பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
 
"பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் சமீபத்தில் இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13 வது ஆண்டாக முன்னணியில் உள்ளார்.
 
உலகப் பொருளாதாரத்தில் வெகுவாக தாக்கம் செலுத்திய நடப்பாண்டிலும் முகேஷ் அம்பானி தொடர்ந்து 13வது ஆண்டாக இந்தியாவின் முன்னணி பணக்காரராக இருந்து வருகிறார். அவரது சொத்து மதிப்பு 88.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
 
முகேஷ் அம்பானியைத் தொடர்ந்து 25.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் கவுதம் அதானியும் அவரைத் தொடர்ந்து 20.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் சிவ்நாடாரும் உள்ளனர்" என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.