வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By சி.ஆனந்தகுமார்
Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:24 IST)

சசிகலாவிற்கு ஆதரவு இல்லை என்று மறைமுகமாக சொல்லிக் காட்டிய கரூர் மாவட்ட அ.தி.மு.க ?

கரூரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நீண்ட நாட்களுக்கு பின்னர் சனிக்கிழமையன்று (17-12-16) கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெளன அஞ்சலி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி அ.தி.மு.க எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். ஏற்கனவே கட்சி பிளக்ஸ் மற்றும் கட் அவுட்டர்கள் வரை இவரின் பெயரை போடாமல் காலம் தாழ்த்தி வந்த கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்த நிகழ்ச்சிக்கும் அவரை அழைத்தாரோ, இல்லையோ என்று தெரியவில்லை,  ஆனால் அம்மாவிற்காக என்று கலந்து கொண்டார்.


 

இவர் கலந்து கொண்டதினால் கரூர் மாவட்ட அளவில் உள்ள இவரது ஆதரவாளர்கள் மட்டுமில்லாமல், ஒன்றுபட்ட அ.தி.மு.க வினர் என்று சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டனர். கரூர் அஜந்தா திரையரங்கம் அருகே தொடங்கிய இந்த மெளன ஊர்வலத்தில் கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமை வகித்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தின் முன்னதாக காலணியை கழட்டிய முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியை பார்த்து தற்போதைய கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் காலணியை கழற்றினார்.




பின்பு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்த இந்த ஊர்வலத்தில் மேற்குறிப்பிட்ட முன்னாள் அமைச்சரும், இந்நாள் அமைச்சர் மட்டுமே வெறுங்காலோடு கலந்து கொண்டு, நடந்து சென்று ஊர்வலத்தில் பங்கு கொண்டனர். ஆனால் ஊர்வலம் தொடங்கிய முதல், இறுதி வரை குனிந்த தலை நிமிராத வாறு, முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜி யாரிடமும் பேசாமல் போட்டோவிற்கு போஸ் கொடுக்காமல், அமைதியாக கலந்து கொண்டார். மேலும் அதே போல் மாவட்ட செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைகளில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை கையில் ஏந்தியவாறு பேரணியில் கலந்து கொண்டார்.

பின்னர் பேரணியின் நிறைவு இடத்தில் பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு கரூர் மாவட்ட அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அழுக ஆரம்பித்த உடன், தற்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் அழ ஆரம்பித்தனர். மேலும் அம்மாவிற்காக (ஜெயலலிதாவிற்காக)  நடத்தப்பட்ட மெளன அஞ்சலி ஊர்வலத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜியை பின்பற்றிய இந்நாள் மாவட்ட செயலாளர் காலணி இல்லாமல் நடந்தது முதல், அழுதது வரை அம்பலமானது,


 

மேலும் வெள்ளிக்கிழமை இரவு சின்னம்மா என்கின்ற சசிகலாவின் பேனரை அகற்றியது கரூர் மாவட்ட அ.தி.மு.க வினர் தான், என்ற உண்மை தற்போது பகிரங்கமாக வெளியாகி உள்ளது. ஏனென்றால் கடந்த வியாழக்கிழமையன்று (15-12-16) காலை கரூர் பைபாஸ் ரவுண்டானா வில் அதாவது திருக்காம்புலியூர் பகுதியில் ஏராளமான சசிகலா படங்கள் கிழிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு முன்னரே கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தமிழக அமைச்சர்களோடு, ஆட்சி அமைக்க சின்னம்மா என்கின்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அழைத்த நிலையில், கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டின் அருகிலேயே பேனர்கள் கிழிக்கப்பட்டிருந்ததும், மேலும் அதே பகுதியின் அருகே தான் அ.தி.மு.க கொள்கை பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான எம்.தம்பித்துரை ஆகியோரின் இல்லங்களும் உள்ள நிலையில் இந்த பேனர் கிழிப்பு என்ன விஷயம் என்று பலதரப்பட்ட மக்களிடம்  கேள்விக்குறியை எழுப்பியது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று (16-12-16) இரவு ஜெயலலிதா உடன் கூடிய சசிகலா படங்களை கரூர் மாவட்ட அ.தி.மு.க எடுத்தது. இதையறிந்த நிருபர்கள் புகைப்படங்கள் எடுக்க முற்பட்டதோடு, அங்கேயே அனைவரும் அந்த வேலையை விட்டு,  விட்டு வேறு இடத்திற்கு கிளம்பினர். ஆனால் அப்புறம் நள்ளிரவோடு, அந்த பேனர்களையும், அதாவது ஜெயலலிதாவின் தோழியான சசிகலா பேனர்களையும், ஜெயலலிதாவின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த அம்மா பேரவை பேனர்களையும் அகற்றினர்.

மறுநாள் சனிக்கிழமையான காலை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்காக மெளன அஞ்சலி என்று அ.தி.மு.க சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டு அதை கடைபிடித்தனர். காரணம் கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் அதன் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும், மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க வின் கொள்கை பரப்பு செயலாளருமான டாக்டர் எம்.தம்பித்துரைக்கும் பிடிக்காதது போல் கரூர் மாவட்ட மக்களை குழப்பியுள்ளனர்.

ஏற்கனவே எங்கேயாவது கூட்டம் நடத்தினாலும், சரி ஆலோசனைக்கூட்டம் உள்ளிட்ட கட்சி நிகழ்ச்சிகள் நடத்தினாலும் சரி கூட்டமே சேராத நேரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்காக கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட இந்த மெளன ஊர்வலத்தில் செந்தில் பாலாஜி கலந்து கொண்டதினாலும் தான் என்றும் அ.தி.மு.க வினரிடையே தெள்ளத்தெளிவாக தெரிந்துள்ளது.

மேலும் அப்போது முதல்வர் ஜெயலலிதாவிற்காக உடல்நிலை முன்னேற்றம் அடைய எந்த ஒரு யாகம் மற்றும் பூஜையில் ஜெயலலிதாவின் படம் இல்லாத நிலையில், வைக்க கூடாது என்று உத்திரவே போட்டாராம், அப்படி இருக்க, இன்று அதாவது சனிக்கிழமையன்று நடைபெற்ற மெளன ஊர்வலத்தின் போது மட்டும் ஏன் ஜெயலலிதாவின் படத்தை அவரே சுமந்து வந்தார் என்பது புரியாத புதிராக உள்ளது.

ஆக போயஸ் கார்டன் சென்று கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பிலும், அமைச்சர் பெருமக்கள் சார்பிலும் ஆதரவு தெரிவிக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சசிகலா உண்மையாகவே பொதுச்செயலாளர் ஆக விருப்பம் இல்லையா ? மேலும் தம்பித்துரையின் ஆதரவாளரான இவருக்கு தம்பித்துரையே ஆணையிட வில்லையா ? என்பது புரியாத புதிராக உள்ளது. காலத்தின் வாழ்வுதனை சூது கவ்வினாலும் இறுதியில் தர்மமே வெல்லும் பார்ப்போம் என்கின்றனர் உண்மையான அ.தி.மு.க வினர்.

-கரூரிலிருந்து சி. ஆனந்தகுமார்