வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 2 ஜனவரி 2017 (16:23 IST)

ஓ.பி.எஸ். - பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு: அரசியலில் தொடரும் பரபரப்பு

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி ஜெயலலிதா மறைந்ததை அடுத்து தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார். பின்னர், ஜெயலலிதா வகித்து வந்த அதிமுக பொதுச் செயலாளர் பதவியினை ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜன் அவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி ஏற்றுக் கொண்டார்.

அதிமுகவில் சசிகலா பொதுச்செயலாளர் பதவி ஏற்றதை தொடர்ந்து அவரே முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும், அதிமுக நிர்வாகிகள் சிலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனா, சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு அவருக்கு எதிராக சிலர் களமிறங்கினர். சிலர், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமின் மகளான தீபா தலைமைப் பதவிக்கு வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், சசிகலாவுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும், அவருக்கு எதிராக ஒரு பிரிவினரும் களத்தில் மோதி வருகின்றனர்.

இதற்கிடையில், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற துணை சபாநயகருமான தம்பித்துரை, சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதனையடுத்து, முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து விலக நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், குளச்சல் துறைமுகம், தமிழக சாலைப் பணிகள் குறித்து முதல்வரிடம் ஆலோசித்ததாக பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.