புதன், 25 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2024 (14:56 IST)

கொட்டுக்காளி படம் குறித்து இன்னும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்.. இயக்குனர் சீனு ராமசாமி கருத்து!

கூழாங்கல் படத்தின் மூலம் நம்பிக்கைக் கொடுத்த இயக்குனர் பி எஸ் வினோத்ராஜின் இரண்டாவது படமான ‘கொட்டுக்காளி’ கடந்த வாரம் ரிலீஸானது. இந்த படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மற்ற கதாபாத்திரங்களில் எல்லாம் புதுமுக நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன் இந்த படத்தைத் தயாரித்துள்ளார்.

ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் வெகுஜனப் பார்வையாளர்களைப் பெரிதாகக் கவரவில்லை. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி பலருக்கு புரியாமல் போனதாக அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இது குறித்து பல தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் விவாதங்கள் நடந்தன. இதுபோன்ற ஒரு விவாதத்தைதான் தான் உருவாக்க விரும்பியதாக இயக்குனர் பி எஸ் வினோத்ராஜ் தெரிவித்திருந்தார். ஆனாலும் படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் அதன் வசூலைக் கணக்கிட்டால் அது லாபம்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்தது பார்வையாளர்கள் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறை என்று இயக்குனர் அமீர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இது குறித்து இப்போது இயக்குனர் சீனு ராமசாமி பேசியுள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “இந்த படம் பல்வேறு உலகப் பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை வென்று கௌரவம் பெற்றுள்ளது. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் போது இதில் இடைவேளை இருக்காது, மற்ற கமர்ஷியல் அம்சங்கள் இருக்காது போன்ற விளக்கங்களை சொல்லி ரசிகர்களை இன்னும் தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். மற்றபடி அது லாபகரமான படம்தான்” எனப் பேசியுள்ளார்.