மச்சி... அவுத்து விட்றா காளைகளை! அடிச்சு விரட்ரா கோழைகளை! - நடிகர் விவேக் கருத்து!
தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுடைய பாரம்பரிய வீர விளையாட்டை மீட்க போராடி வருகின்றனர். இதில் ஜல்லிக்கட்டுக்காக போராடி வரும் இளைஞர்களை நடிகர் விவேக் வெகுவாக பாராட்டியுள்ளார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் மாபெரும் அமைதிப் புரட்சியே நடந்து கொண்டிருக்கிறது. இளைஞர்களும், மாணவ-மாணவியரும் அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விவேக் ட்விட்டரில்...
தமிழ்நாட்டில் இதுவரை ஒரு அலங்காநல்லூர்!- ஆனால் இன்று தமிழ்நாடே ஒரு "அடங்கா நல்லூர்" ஆகி விட்டது. ஜல்லிக்கட்டு வெற்றிப்படிக்கட்டை நெருங்கி விட்டது. நேற்று அதை மெரினாவில் நேரில் கண்டேன். அடுத்து நம் இலக்கு விவசாயிகள்!
இங்கிருந்து இளைஞர்களைக் கொடுங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்று விவேகானந்தர் அன்று மெரினாவில் சொன்னார்! இன்று அது நடக்கிறது பன்மடங்காய்!
இந்த அறப்போராட்டத்தில் எல்லா இன, மொழி, மத அமைப்பு இளைஞர்களும் இணைந்து விட்டனர். இது இப்படியே தொடர்ந்தால் காளையும் நமதே! நாளையும் நமதே! என்று இவ்வாறு தொடர்ந்து ட்விட்டரில் தம்முடைய கருத்துகளை, மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பதிவிட்டு வருகிறார்.
அவை உங்கள் பார்வைக்கு....