விடாமுயற்சி கதைக்காக ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்ட தொகை இவ்வளவா?... வெளியான தகவல்!
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பல்வேறு பிரச்சனைகளால் பல தாமதங்களைக் கடந்து கடந்த 6 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸானது. படத்தில் அஜித்தோடு த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பலர் நடிக்க, லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கி இருந்தார். இரண்டாண்டுகள் தங்கள் ஆதர்ச நாயகனை திரையில் பார்க்க வந்த ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகவே அமைந்தது.
வழக்கத்துக்கு மாறாக அஜித் இந்த படத்தில் அடக்கி வாசித்துள்ளார் என்று பாராட்டுகள் எழுந்தாலும், படத்தில் சுவாரஸ்யம் என்பது மருந்துக்கும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் முதல் நாளுக்குப் பின்னர் படிப்படியாக வசூல் வீழ்ச்சியடைந்தது. இதனால் படம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த படம் ஹாலிவுட் படமான பிரேக்டவுன் என்ற படத்தின் ரீமேக் என்பது ரிலீஸுக்குப் பிறகு உறுதியானது. இந்த கதையின் ரீமேக் உரிமையை முறையாக லைகா நிறுவனம் வாங்காததால் கடைசி நேரத்தில் அந்த படத்தை தயாரித்த பேரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் நெருக்கடிகளைக் கொடுத்தது. படம் ரிலீஸ் தாமதத்தில் அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அந்த படம் ரிலீஸானது. தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி கதை உரிமைக்காக கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு கதைக்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளதா என்று ஆச்சர்யமாக கோடம்பாக்கம் வட்டாரத்தில் பலரும் வாயில் விரல் வைக்கின்றனர்.